ஐந்து நாள் விடுப்பு: பஸ் கட்டணம் உயர்வு

ஐந்து நாட்கள் தொடர் விடுமுறையால், அந்த நாட்களில், தென் மாவட்டங்களுக்கு செல்லும், ஆம்னி பஸ்களின் கட்டணம், உயர்த்தப்பட்டுள்ளது. வரும், அக்., 8 சனி; 9 ஞாயிறு வழக்கமான விடுமுறை. அக்., 10ல், ஆயுதபூஜை; 11ல், விஜயதசமி, 12ல், மொகரம் பண்டிகை என, தொடர்ந்து, ஐந்து நாட்கள் விடுமுறை வருவதால், சென்னையில் வசிப்போர், சொந்த ஊருக்கு செல்ல உள்ளனர். துாத்துக்குடி மாவட்டம், குலசேகரன் பட்டினத்தில், அக்., 10ல், தசரா விழா நடக்க உள்ளது.
இதில், பங்கேற்க, தமிழகம் முழுவதும் இருந்தும், ஏராளமான பக்தர்கள் செல்வர். இதனால், திருச்செந்துார் செல்லும், ஆம்னி பஸ்களின் கட்டணம், ஐந்து நாட்களுக்கும், கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது, 700 ரூபாய் வசூலிக்கப்படும் பஸ்களில், 1,200 ரூபாய்; 1,000 ரூபாய் வசூலிக்கப்படும், வால்வோ பஸ்களில், 1,500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுஉள்ளது. பிற மாவட்டங்களுக்கு செல்லும், பஸ்களின் கட்டணமும் உயர்ந்துள்ளது, மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.