அழைப்பு விபரங்களை விளம்பரதாரர்களுடன் பகிர்ந்து கொள்கிறதா ரிலையன்ஸ் ஜியோ ? வெடிக்கும் சர்ச்சை!


தங்களது வாடிக்கையாளர்களின் அழைப்பு விபரங்களை தனியார் விளம்பரதாரர்களுடன் ரிலையன்ஸின் ஜியோ பகிர்ந்து கொள்வதாக அதிர்ச்சி குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தியாவின் புகழ்பெற்ற கணினி தகவல் திருட்டு குழுக்களில் ஒன்றான 'அனானிமஸ் இந்தியா' தங்களது வலைப்பூ பதிவு ஒன்றில் இந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி ரிலையன்ஸ் ஜியோ செயலியானது, தங்களது வாடிக்கையாளர்களின் அழைப்பு விபரங்களை அமெரிக்கா மற்றும் சிங்கப்பூரில் அமைந்திருக்கும் சர்வர்களுக்கு அனுப்பி வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டும் இல்லாமல் 'மேட் -மீ ' என்ற விளம்பரதாரர் ஒருவருடனும் இந்த தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படுவதாகவும் அந்த வலைப்பூ தெரிவிக்கிறது.
இதே குழுவின் வலைப்பூவின் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ;பதிவு ஒன்றில் ரிலையன்ஸ் ஜியோ தகவல் பரிமாற்ற செயலியில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பது சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.அதன்மூலம் சங்கேத மொழியில் தகவல்கள் பாதுகாக்கப்படாததால் எளிதில் திருடு போக வாய்ப்பிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.