தமிழக மின் வாரியத்தில் 40 ஆயிரம் காலிப்பணியிடங்கள்

துாத்துக்குடி: 'தமிழக மின் வாரியத்தில், 'ஹெல்பர், போர்மேன்' உதவிபொறியாளர் என, 40 ஆயிரம் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்' என, பொறியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

துாத்துக்குடியில், தமிழக மின் பொறியாளர்கள் குழுமத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. மாநில தலைவர் சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார்.செயலாளர் கந்தகுமார் வரவேற்றார். பொருளாளர் அனந்தநாராயணன் அறிக்கை சமர்ப்பித்தார். மாநில பொதுச்செயலாளர் ராஜ்குமார் பேசியதாவது: தமிழகத்தில், சீரான மின் உற்பத்தி, சீரான மின் வினியோகத்திற்கு மின் வாரிய பணியாளர்கள் திறம்படபணியாற்றி வருகின்றனர். அத்தியாவசிய தேவையான மின்சாரம் மக்களுக்கு கிடைக்க அக்கறையுடன் பணியாற்றுகின்றனர். மின் வாரிய பணியாளர்கள் தங்களுக்கான சலுகைகள், உரிமைகளுக்காக கோர்ட்டில் போராடி போராடி பெற வேண்டிய நிலை உள்ளது. தமிழக மின் வாரியத்தில், 'ஹெல்பர், போர்மேன்' உதவி பொறியாளர் உட்பட, 40 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளன. இவற்றை அரசு உடனடியாக நிரப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாநில துணைத்தலைவர்
கிருஷ்ணசாமி நன்றி கூறினார்.--