பிளஸ் 2 பாடங்கள் டிசம்பருக்குள் முடிக்க 'கெடு'

    பிளஸ் 2 பாடங்களை டிசம்பருக்குள் முடிக்க, அரசு பள்ளிகளுக்கு, கல்வித் துறை அதிகாரிகள், 'கெடு' விதித்துள்ளனர்.

 
            பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்புகளுக்கு, காலாண்டு தேர்வு நடந்து வருகிறது. வரும், 24ம் தேதி முதல் காலாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட உள்ளது. தற்போதைய நிலையில், அனைத்து அரசு பள்ளிகளிலும், பிளஸ் 2 மாணவர்களுக்கு, முக்கிய பாடப்பிரிவின், முதலாம் பாக பாடங்கள் முடிக்கப்பட்டுள்ளன.
காலாண்டு தேர்வு முடிந்ததும், அரசு பள்ளிகளின் பிளஸ் 2 மாணவர்களுக்கு, இரண்டாம் பாக பாடங்களையும் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்திற்குள், இந்த இலக்கை அடைந்து விட்டால், அரையாண்டு தேர்வுக்கு பின், பொதுத் தேர்வு வரும் வரை, தினசரி திருப்புதல் தேர்வுகள் வைத்து, மாணவர்களை பொதுத் தேர்வுக்கு தயார் செய்ய முடியும் என, அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே, தனியார் பள்ளிகளில், பிளஸ் 1 வகுப்பிலேயே, பிளஸ் 2 பாடங்களை நடத்துவதால், அனைத்து பாடங்களும் முடியும் நிலையில் உள்ளன. காலாண்டு தேர்வு முடிந்ததும், பிளஸ் 2 பாடங்களை மீண்டும் ஒரு முறை நடத்த, தனியார் பள்ளிகள் முடிவு செய்துள்ளன