அக்டோபர் 17 மற்றும் 19-ல் இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல்: நாளை முதல் வேட்புமனு தாக்கல்

சென்னை: தமிழகத்தில் வரும் அக்டோபர் 17 மற்றும் 19-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதியை இன்று மாநில தேர்தல் ஆணையர் சீத்தாராமன் அறிவித்தார்.
தமிழகத்தில் தற்போதுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் அடுத்த மாதம் அக்டோபர் 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, தேர்தல் நடத்துவதற்கான ஆலோசனைகளில் தமிழக தேர்தல் ஆணையம் மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை ஆகியவை ஈடுபட்டு வந்தன.
இந்நிலையில், இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழகத் தலைமை தேர்தல் ஆணையர் கூறியதாவது:
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, மூன்றாம் நிலை நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கான நேரடித் தேர்தல்கள் அக்டோபர் 17 மற்றும் 19-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும்.
காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். மொத்தம் 91,098 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. உள்ளாட்சித் தேர்தலில் 4 விதமான வாக்குச்சீட்டுகளை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான வேட்புமனுக்கள் நாளை (26.09.2016) முதல் பெறப்படும். நாள்தோறும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்புமனுக்கள் பெறப்படும்.
வேட்புமனுக்களை தாக்கல் செய்ய அக்டோபர் 3-ஆம் தேதி கடைசி நாளாகும். தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் அக்டோபர் 4-ஆம் தேதி பரிசீலனை செய்யப்படுகிறது. வேட்புமனுக்களை திரும்பப் பெற அக்டோபர் 6-ஆம் தேதியே கடைசி நாளாகும்.
வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 21-ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இந்த தேர்தலில் 5 கோடியே 80 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
நேரடி தேர்தல் அனைத்தையும் அக்டோபர் 26-ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நேரடித் தேர்தலுக்குப் பின்னர் மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் என 13,362 பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நடத்தப்படும். வெற்றி பெற்றவர்களின் பதவி ஏற்பு மற்றும் முதல் கூட்டம் 26-ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவித்தார்.
முதல் கட்டமாக அக்டோபர் 17-ஆம் தேதி 10 மாநகராட்சிகளுக்கும், திண்டுக்கல், சென்னை மாநகராட்சிகளுக்கு அக்டோபர் 19-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும். தேர்தல் நடத்தை விதி முறைகள் உடனே அமலுக்கு வந்துள்ளன.
தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 31 மாவட்ட பஞ்சாயத்துகள், 385 பஞ்சாயத்து யூனியன்கள், 528 பேரூராட்சிகள், 12,524 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன.
அனைத்து மாநகராட்சிகளிலும் 919 வார்டுகளும், நகராட்சிகளில் 3,613 வார்டுகளும், பேரூராட்சிகளில் 8,288 வார்டுகளும், மாவட்ட பஞ்சாயத்துகளில் 655 வார்டுகளும், பஞ்சாயத்து யூனியன்களில் 6,471 வார்டுகளும், கிராம பஞ்சாயத்து வார்டுகள் 99,324 என மொத்தம் 1 லட்சத்து 19 ஆயிரத்து 399 பதவிகள் உள்ளன.
இந்த முறை வார்டு கவுன்சிலர்கள், கிராம பஞ்சாயத்து தலைவர்கள் ஆகிய பதவிகளுக்கு மட்டும் நேரடித் தேர்தல் நடக்கிறது. மேயர்கள், நகராட்சி, பேரூராட்சி, மாவட்ட பஞ்சாயத்து மற்றும் பஞ்சாயத்து யூனியன் தலைவர்கள் ஆகியோர் கவுன்சிலர்கள் மூலம் மறைமுகமாக தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.