ரத்தாகிறது சமூக அறிவியல் பணியிடம் : வரலாறு ஆசிரியர்கள் எதிர்ப்பு

  உபரி ஆசிரியர்கள் பெயரில் சமூகஅறிவியல் பணியிடங்களை ரத்து செய்வதற்கு வரலாறு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 
 
           கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்களை நிர்ணயிக்க வேண்டும். அதன்படி உபரி ஆசிரியர்களை கணக்கிட்டு பணிநிரவல் செய்ய வேண்டும். இந்த ஆண்டு பெரும்பாலான அரசு உயர்நிலை,  மேல்நிலைப் பள்ளிகளில் ஏராளமான பட்டதாரி ஆசிரியர்கள் உபரியாக இருப்பது கண்டறியப்பட்டு உள்ளன. இதில் சமூகஅறிவியல் ஆசிரியர் பணியிடங்களை கல்வித்துறை உபரியாக கணக்கிட்டுள்ளது. அவர்கள் ஆக., 27 முதல் 29 வரை நடக்கும் கவுன்சிலிங் மூலம் பணிநிரவல் செய்யப்பட உள்ளனர். இதற்கு வரலாறு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு வரலாறு ஆசிரியர் கழக மாநில பொதுச் செயலாளர் பழனியப்பன் கூறியதாவது:
அரசாணைப்படி முதலில் அறிவியல், தொடர்ந்து கணிதம், சமூகஅறிவியல், ஆங்கிலம், தமிழ் என்ற அடிப்படையில் தான் ஆசிரியர்களை பணிநிரவல் செய்ய வேண்டும். ஆனால் சமூகஅறிவியல் ஆசிரியர்களை பணிநிரவல் செய்வது அரசாணைக்கு எதிரானது. மேலும் 5 பாட வேளைகள் மட்டுமே சமூக அறிவியல் உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக அறிவியல் பாடத்தில் உள்ள பொருளாதாரம் முக்கியத்துவம் வாய்ந்தது. இதனால் சமூக அறிவியல் ஆசிரியர்களை பணிநிரவல் செய்ய கூடாது. இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குனருக்கு மனு அனுப்பியுள்ளோம், என்றார்.