தேசிய திறனாய்வு தேர்வு தேதி திடீர் மாற்றம்

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான, தேசிய திறனாய்வு தேர்வு தேதி,
தமிழகத்தில், திடீரென மாற்றப்பட்டு உள்ளது.பத்தாம் வகுப்பு மாணவர்களில், திறன்மிக்கவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு மத்திய அரசு, பிளஸ் 1 முதல், ஆராய்ச்சி படிப்பு வரை,
மாதந்தோறும், கல்வி உதவி வழங்கி வருகிறது. இந்த தேர்வு, மாநில மற்றும் தேசிய அளவில் இரண்டு கட்டங்களாக நடக்கிறது.
மாநில அளவிலான தேர்வு, நவ., 6ம் தேதி நடக்கும் என, தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி., அறிவித்தது.
தமிழக அரசு தேர்வுத் துறை, இதற்கான அறிவிப்பை, சில வாரங்களுக்கு முன் வெளியிட்டது. தற்போது, தமிழகத்தில் தேர்வு தேதி மாற்றப்பட்டு உள்ளது. 'நவ., 6ம் தேதி, தமிழகத்தில், அரசு பணியாளர் தேர்வாணையத்தின், குரூப் - 4 தேர்வு நடப்பதால், தேசிய திறனாய்வு தேர்வு, நவ., 5ம் தேதி நடத்தப்படும்; இதற்கு, என்.சி.இ.ஆர்.டி., அனுமதி பெறப்பட்டு உள்ளது' என, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்து உள்ளார்.