ஆசிரியர் சங்க தலைவர் 'சஸ்பெண்ட்':அனைத்து சங்கங்களும் கடும் எதிர்ப்பு

அரசு பள்ளியில் பணியாற்றும், கலை ஆசிரியர் சங்கத் தலைவரை, பள்ளிக் கல்வித்துறை அதிரடியாக, 'சஸ்பெண்ட்' செய்துள்ளது; இதற்கு, ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்தில், 'வாட்ஸ் ஆப்' சமூக வலைதளத்தில் தகவல்கள் பரிமாறியதால், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தைச் சேர்ந்த, மூன்று ஆசிரியர்களுக்கு, 'மெமோ' தரப்பட்டது.

இந்நிலையில், நீலகிரி மாவட்டம், தும்மானாட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் ஓவிய ஆசிரியர் எஸ்.ஏ.ராஜ்குமார், திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கலை ஆசிரியர்கள் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவராக உள்ள இவர், அதிகாரிகளின் விதிமீறல்கள் தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்குகள் நடத்தி வருகிறார்; 19 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, போராட்டமும் நடத்தி வருகிறார். இவருக்கான சஸ்பெண்ட் உத்தரவில், பத்திரிகைகளுக்கு தவறான செய்திகளை தருவதாக, நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி டி.கணேஷ்மூர்த்தி தெரிவித்து உள்ளார்; இந்த நடவடிக்கைக்கு, ஆசிரியர் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துஉள்ளனர்.
அதிகாரிகள் தவறே செய்யாமல் இருக்கின்றனரா; அதை சங்கங்கள் தான் வெளிக்கொண்டுவருகின்றன. அதனால், இது போன்ற அடக்குமுறைநடவடிக்கைகளை எடுக்கின்றனர். உடனடியாக, சஸ்பெண்ட் உத்தரவை வாபஸ் பெற வேண்டும்.
எஸ்.சி.கிப்சன்
பொதுச் செயலர், தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் (டாடா).

அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில், அதிகாரிகளின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. சங்கத்தினர் போராடவும், பத்திரிகைகளிடம் பேசவும் அரசியலமைப்பு சட்டம் உரிமை அளித்துள்ளது.
பி.சங்கரநாராயணன்
தலைவர், அகில இந்திய அனைத்து ஆசிரியர்கள் சங்கம்.

சங்க நிர்வாகிகள் மீதும், ஆசிரியர்கள் மீதும் அடக்குமுறை நடவடிக்கை கூடாது. இயக்க நலன்கள், இயக்க உறுப்பினர்களுக்கு பாதிப்பு
ஏற்பட்டால், சங்க நிர்வாகிகள் தான் குரல் கொடுக்க முடியும்; அதை தடுப்பது சரியல்ல.
பி.இளங்கோவன்ஒருங்கிணைப்பாளர், ஜாக்டோ ஆசிரியர் கூட்டமைப்பு.

ஓவியம், கலை ஆசிரியர்களின் நலனுக்காக செயல்படும், சங்க நிர்வாகி மீது, விதிகளை மீறி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்; இது, அதிகாரிகளின் பழி வாங்கும் செயல்.
நல்ல.காசிராஜன்
தலைவர், தமிழ்நாடு ஓவிய ஆசிரியர் கூட்டமைப்பு.