அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன

தமிழகத்தில் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் (பணியிடங்களின் எண்ணிக்கை 842) அனைத்தும் இணையதளம் மூலம் கலந்தாய்வு முறையில் முழுமையாக நிரப்பப்பட்டன.
இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்ககம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: ""2016-17ம் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித் துறையில் செயல்படும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி நடைபெற்ற பொது மாறுதல் கலந்தாய்வின்போது
இணையதளம் மூலம் அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு 325 தலைமை ஆசிரியர்களுக்கு மாறுதல் ஆணை வழங்கப்பட்டது. பொது மாறுதலுக்குப் பிறகு காலியாக இருந்த 517 மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் கலந்தாய்வு நடத்தப்பட்டு ஆசிரியர்கள் விரும்பிய இடங்களுக்கு பதவி உயர்வு ஆணை வழங்கப்பட்டது.
தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்பட்டுள்ளன. இந்தப் பணிகள் சரியாக நடைபெறுவதைக் கண்காணிக்கும் பொருட்டு பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் அனைத்து இணை இயக்குநர்களும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்குச் சென்று மேற்பார்வை செய்து வருகின்றனர் என்று பள்ளிக் கல்வி இயக்ககச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
My Blogger Tricks