'தத்கல்' டிக்கெட் முன்பதிவு அரசு பஸ்களில் அறிமுகமாகிறது

''தமிழக அரசு விரைவு பஸ்களில், 'தத்கல்' டிக்கெட் முன்பதிவு மற்றும் மொபைல் போன் செயலி முன்பதிவு திட்டம் அறிமுகப்படுத்தப்படும்,'' என, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

சட்டசபையில், போக்குவரத்து துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து, அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்புகள்:

அனைத்து அரசு துறை வாகன ஓட்டுனர்களுக்கு, புத்துணர்வு பயிற்சி அளிக்கவும், புதிதாக பணியில் சேர்ந்தவர்களுக்கு தகுந்த பயிற்சி அளிக்கவும், மோட்டார் வாகன பராமரிப்புத் துறையின் கீழ் இயங்கும் திருச்சி, மதுரை, சேலம் ஆகிய இடங்களில் உள்ள, அரசு தானியங்கி பணிமனைகளில், 'அம்மா ஓட்டுனர் பயிற்சி நிறுவனம்' துவங்கப்படும்.
அரசு விரைவு போக்குவரத்து கழகம் மற்றும் இதர தமிழக அரசு போக்குவரத்து கழகங்களின் நெடுந்துார பஸ்களில், 'மொபைல் ஆப்' எனப்படும், மொபைல் போன் செயலி வழி, டிக்கெட் முன்பதிவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
அவசர வேலை காரணமாக, உடனடியாக பயணம் மேற்கொள்ள வேண்டிய பயணிகள் வசதிக்காக, அரசு விரைவு பஸ்களில், தலா, நான்கு இருக்கைகள், 'தத்கல்' எனப்படும், முன்பதிவு முறையில் அறிமுகப்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.