பதவி உயர்வு பட்டியல் வெளியிடாமல் கவுன்சலிங் : வரலாறு ஆசிரியர்கள் கொதிப்பு.

பதவி உயர்வு பட்டியல் வெளியிடாமல் கவுன்சலிங் தேதி அறிவிக்கப்பட்டதால் வரலாறு ஆசிரியர்கள் குழப்பத்திலும், கொந்தளிப்பிலும் உள்ளனர்.தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளி ஆசிரியர் இடமாறுதல், பதவி உயர்வு கவுன்சலிங் நடந்து வருகிறது.

 
          ஒவ்வொரு பாடத்திற்கும் பதவி உயர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிகளில் சமூக அறிவியல் பாடத்தை புவியியல் மற்றும் வரலாறு ஆசிரியர்கள் நடத்துகின்றனர். இதில் புவியியல் ஆசிரியர்களின் பதவி உயர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், வரலாறு ஆசிரியர்களின் பதவி உயர்வு பட்டியல் மட்டும் வெளியிடப்படவில்லை. வரும் 22ம் தேதி வரலாறு ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடக்க உள்ளதையடுத்து இப்பிரிவு ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.இளங்கலை வரலாறு முடித்து ஆசிரியர் பணியில் சேரும் பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு பெறும்போது 1:3 என்ற விகிதாச்சாரம் பின்பற்றப்படுகிறது. மொத்தமுள்ள வரலாறு ஆசிரியர் பதவி உயர்வு பணியிடங்களில் இளங்கலை, முதுகலையில் வரலாறு படித்தவர்களுக்கு 1 பணியிடமும், இளங்கலையில் பிற பாடங்கள் படித்து, முதுகலையில் மட்டும் வரலாறு படித்தவர்களுக்கு (கிராஸ் மேஜர்) 3 பணியிடமும் ஒதுக்கப்படுகிறது. இதனால் இளங்கலை, முதுகலையில் வரலாறை முதன்மை பாடமாக படித்த ஏராளமான ஆசிரியர்கள் பதவி உயர்வு கிடைக்காமல் பாதிக்கப்பட்டனர். இந்த விகிதாச்சார முறையை எதிர்த்து ஐகோர்ட் மதுரை கிளையில் கடந்த 2012ல் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. இருப்பினும் கடந்த ஆண்டுகளில் முந்தைய நிலையிலேயே பதவிஉயர்வு வழங்கப்பட்டது. இந்த ஆண்டு கலந்தாய்வுக்கு முன் பதவி உயர்வு பட்டியலை வெளியிடாமல் கல்வித்துறை தாமதம் செய்து வருகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு வரலாறு ஆசிரியர் கழக மாநில பொதுச்செயலாளர் பழனியப்பன் கூறுகையில், ‘‘2012ல் தொடர்ந்த வழக்கில் பள்ளிக்கல்வித்துறைக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிமன்றம், வரலாறு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு என்பது இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என உத்தரவிட்டது. ஆனாலும், கடந்த 3 ஆண்டுகளாகமுந்தைய நிலைப்படியே பதவி உயர்வு அளித்து வருகின்றனர். இந்த ஆண்டு எந்த அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படும் என்பது பட்டியல் வெளியிடப்பட்டால் மட்டுமே தெரியும். அவ்வாறு தெரிந்து அடுத்தகட்ட நீதிமன்ற நடவடிக்கைக்கு செல்வதை தடுக்க வரலாறு ஆசிரியர் பட்டியலை மட்டும் வெளியிடாமல் வைத்துள்ளனரோ என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக பட்டியலை வெளியிட வேண்டும்,’’ என்றார்.