பொதுத்தேர்வில் 'ரேங்க்': அரசு பள்ளிகளில் சிறப்பு வகுப்பு

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற, அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை, மாலை நேரங்களில், சிறப்பு வகுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில், 4,000க்கும் மேற்பட்ட அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் உள்ளன.


இவற்றில், 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கின்றனர்.அரசு பொதுத்தேர்வுகளில், சில ஆண்டுகளாக, அரசு பள்ளி மாணவர்கள் மாநில, 'ரேங்க்' பெறுவதில்லை. மாறாக, தனியார் மெட்ரிக் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், அதிக மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில், முதல் மூன்று இடங்களை பிடிக்கின்றனர்.வரும் கல்வியாண்டிலாவது ஒவ்வொரு மாவட்டமும், மாநில அளவில் ரேங்க் எடுக்கும் வகையில், மாணவர்களை தயார்படுத்த வேண்டுமென, கல்வித்துறைஉத்தரவிட்டுள்ளது.


இதை தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும், காலை மற்றும் மாலை நேர சிறப்பு வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன.அரசு பள்ளிகள் துவங்கும் நேரம், முடியும் நேரத்திற்கு முன், காலை, மாலை, 45 நிமிடங்கள் கூடுதலாக சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. வாரம் ஒரு முறை கட்டாய தேர்வு நடத்தவும், தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.