பிளஸ் 2 கணிதம், அறிவியலுக்கு நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம்: அடுத்த ஆண்டு முதல் அமலாகிறது

பிளஸ் 2 வகுப்பில் கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களுக்கு நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் வரும் கல்வியாண்டு (2017-18) முதல் அமலுக்கு வருகிறது.நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு பாடத்திட்டம் தற்போது அமலில் இருந்து வருகிறது.

 
       இதனால் மாநில பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் பிளஸ் 2 முடித்த பின், தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு எழுதும்போது மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர்.அடுத்த ஆண்டு முதல் மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. இத்துடன் ஏற்கெனவே தேசிய பொறியியல் கல்வி நிறுவனங்களில் சேர கூட்டு நுழைவுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இதனால் கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களுக்கு அனைத்து மாநிலங்களிலும் ஒரே பாடத்திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.முன்னதாக, இந்த ஒரே பாடத் திட்டம் தொடர்பாக மத்திய அரசு சார்பில் தேசிய அளவிலான கல்வி ஆலோசனைக் குழு அமைக்கப்பட் டிருந்தது. தெலங்கானா மாநில மேல்நிலைக் கல்வி வாரிய செய லாளர் ஏ.அசோக் தலைமையிலான இந்தக் குழு கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களுக்கு ஒரே பாடத்திட்டத்தைப் பரிந்துரை செய்தது. இது தொடர்பாக இந்தக் குழு நாடு முழுவதிலும் உள்ள 30 மேல்நிலை கல்வி வாரியங்களிடம் பேசியதாகவும் வரும் 2017-18-ம் கல்வியாண்டு முதல் ஒரே பாடத் திட்டத்துக்கு இவை சம்மதம்அளித்துவிட்டதாகவும் தெரியவந்துள்ளது.

இது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக வட்டாரம்  கூறும்போது, “இந்த ஒரே பாடத்திட்டம் 70 சதவீத அளவுக்கு மட்டுமே அமல்படுத்தப்படும். மீதமுள்ள 30 சதவீதத்தில் மாணவர்களுக்கு செயல்முறை பயிற்சி அளிப்பது குறித்து மாநில கல்வி வாரியங்களே தங்களுக்கு ஏற்றபடி மாற்றம் செய்து கொள்ளலாம். மாநில மேல்நிலைக் கல்வி வாரியங்க ளுடன் மத்திய கல்விக்குழு பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்து ஒப்பந்தம் இட்டுள்ளனர். சமூகவியல் பாடங்களிலும் ஒரே பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த மாநிலகல்வி வாரியங்கள் எதிர்ப்பு தெரிவித்தன” என்றனர்.திரிபுரா மாநில மேல்நிலை கல்வி வாரியத்தின் செயல் தலைவ ரான இ.பி.கார்பி தலைமையிலும் ஒரு மத்திய கல்வி ஆலோசனைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

 இக் குழு, நாடு முழுவதிலும் கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தில் ஒரே வித வினாத்தாள் அமைக்க ஆலோசித்து வருகிறது. இத்துடன், குறுகிய விடை, ஒருவரி விடை, கட்டுரை போன்றவற்றுக்கான மதிப்பெண்கள் ஒரேமாதிரியாக அளிக்கவும் திட்டமிட்டு வருகிறது. இதன் பரிந்துரைகள் மாநில மேல்நிலைக் கல்வி வாரியங்கள் முன் வைக்கப்பட்டு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இறுதி முடிவு எடுக்கும்.வட மாநிலங்களில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களான ஜாமியா மில்லியா, அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் ஆகிய வற்றிலும் பிளஸ் 2 கல்வி போதிக் கப்படுகிறது. ஆனால் இவற்றிலும் மத்திய, மாநில பாடத்திட்டங்களை விட பிளஸ் 2 பாடத்திட்டம் வேறுபட்டதாக உள்ளது. எனினும் தேசிய கல்வி ஆராய்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) பாடத்திட்டங்கள் நாடு முழுவதிலும் ஒரே மாதிரியாக உள்ளன. இதே பாடத்திட்டத்தை நாட்டின் சுமார் 15 மேல்நிலைக் கல்வி வாரியங்கள் பின்பற்றி வருகின்றன.

தேசிய அளவிலான நுழைவுத்தேர்வை தங்கள் மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டும் என இவை கருதுவதே இதற்கு காரணம்.முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கணிதம், அறிவியல், பொருளாதாரம் ஆகிய பாடங்களுக்கு நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் கொண்டுவர கடந்த 2010-ல் முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால் மாநில மேல்நிலைக் கல்வி வாரியங்களுக்கு இடையே சரியான ஒருங்கிணைப்பு இல்லாததால்இதை அமல்படுத்த முடியவில்லை.