அரசு பள்ளிகளில் ரூ. 1.60 கோடியில் இரு உள் விளையாட்டரங்கம்

தமிழகத்தில், முதன் முதலாக, 'ராஜிவ் கேல் அபியான்' திட்டத்தின் கீழ், தேனி மாவட்டத்தில், இரு இடங்களில், 1.60 கோடி ரூபாயில் உள்விளையாட்டரங்கம் அமைக்க விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய சுற்றறிக்கை: மத்திய அரசின், 'ராஜிவ் கேல் அபியான்' திட்டத்தின் கீழ், தேனி மாவட்டம், பெரியகுளம் ஒன்றியம், சில்வார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆண்டிபட்டி ஒன்றியம், கன்னியப்பபிள்ளைபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்க மத்திய, மாநில அரசுகள், 1.60 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளன. இதில் முதல்கட்டமாக, சில்வார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்விளையாட்டு அரங்க கட்டுமான பணிக்காக, 80 லட்சம் ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்து, அதில், 40 லட்சம் ரூபாய் காசோலையை தேனி கலெக்டருக்கு அனுப்பியுள்ளது.
இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து, மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜேந்திரன் கூறுகையில், “சில்வார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் கூடைப்பந்து, வாலிபால், இறகுபந்து, கைப்பந்து, 'ஜிம்னாஸ்டிக்' போன்ற விளையாட்டுகள் நடக்கும் வகையில் அரங்கம் அமைக்கப்பட உள்ளது. இப்பணி முடிந்ததும், கன்னியப்பபிள்ளைபட்டியில் உள்விளையாட்டரங்கம் அமைக்கும் பணி நடக்கும்,” என்றார்.