மாநில பாடத் திட்டத்தை மேம்படுத்த ஆசிரியர்கள் கோரிக்கை - DINAMANI

மத்திய அரசின் இடைநிலை கல்வி திட்டத்துக்கு இணையாக மாநில பாடத் திட்டத்தை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கையெடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க அவசரச் செயற்குழுக் கூட்டம் மாநிலத் தலைவர் செல்வராஜ் தலைமையில் நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் செல்வக்குமார் வரவேற்றார். மாநில தகவல் தொடர்பு செயலாளர் சந்திரசேகரன், பொருளாளர் தமிழ்மணியன், துணைத்தலைவர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை, பட்டதாரி ஆசிரியர் பணிமூப்பு அடிப்படையில் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான முன்னுரிமை பட்டியலில் சேர்க்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கைத் தொடுத்துள்ள நேரடி நியமனம் பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த சங்கத்துக்குக் கண்டனம் தெரிவிப்பது.
மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் 50 சதவீதம் நேரடி நியமனத்திலும், 50 சதவீதம் பதவி உயர்வின் மூலமும் நிரப்ப வேண்டும் எனப் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவது, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 2016-17ஆம் ஆண்டுக்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வை 100 சதவீதம் வெளிப்படையாக நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களின் நலன்கருதி மத்திய அரசின் இடைநிலை கல்வித் திட்டத்துக்கு இணையாக மாநில அரசின் பாடத் திட்டத்தை மேம்படுத்த அரசு ஆவன செய்ய வேண்டும்.
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வர வேண்டும். முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியில் இருந்து உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராக பணிமாறுதல் செய்யும்போது பதவி உயர்வாக கருதி 6 சதவீத ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும். மாவட்ட தலைவர்கள் முருகேசன், துரைராஜ், அன்பரசு, திருவாரூர் மாவட்ட பொறுப்பாளர் ஜெயேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.