'நிரந்தர ஆசிரியர் இல்லாவிட்டால் அங்கீகாரம் கிடையாது!' : பி.எட்., கல்லூரிகளுக்கு பல்கலை எச்சரிக்கை

'நிரந்தர ஆசிரியர்களை நியமிக்காவிட்டால், அங்கீகாரம் கிடையாது' என, அனைத்து பி.எட்., கல்லுாரிகளுக்கும், ஆசிரியர் கல்வியியல் பல்கலை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கலை மற்றும் அறிவியலில், இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப்படிப்பு முடித்தவர்கள், பள்ளி ஆசிரியராக சேர, பி.எட்., என்ற ஆசிரியர் கல்வியியல் படிப்பை முடிக்க வேண்டும்.
கடந்த கல்வி ஆண்டுக்கு முன் வரை, இந்த படிப்பு, ஓராண்டு காலமாக நடத்தப்பட்டது. ஆனால், மத்திய அரசின் புதிய பாடத்திட்டத்தின் படி, கடந்த ஆண்டு முதல், பி.எட்., படிப்பு, இரண்டு ஆண்டு படிப்பாக மாற்றப்பட்டு உள்ளது. தமிழகத்தில், 690 பி.எட்., கல்லுாரிகள் உள்ளன. இவற்றில் பல கல்லுாரிகளில், எம்.எட்., படிப்பும் நடத்தப்படுகிறது. 'இரண்டு ஆண்டு படிப்புகளை நடத்தும் வகையில், பல கல்லுாரிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை; நிரந்தர
கல்லுாரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் நியமிக்கப்படவில்லை' என, ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கு புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து, அனைத்து கல்லுாரிகளுக்கும், ஆசிரியர் கல்வியியல் பல்கலை பதிவாளர் கலைச்செல்வன் எச்சரிக்கை கடிதம் அனுப்பி உள்ளார்.
கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகளில், நிரந்தரமாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டியது கட்டாயம். கல்லுாரிகளில், இரண்டு பிரிவு வகுப்புகள் என்றால், தலா, 50 மாணவர் வீதம், இரு ஆண்டுகளுக்கு, 200 மாணவர்களை சேர்க்கலாம். இதற்கு, 16 ஆசிரியர்கள் கண்டிப்பாக நிரந்தர நியமனம் செய்யப்பட்டிருக்க வேண்டும். அதேபோல், ஒரு பிரிவு வகுப்பு என்றால், 50 மாணவர் வீதம், இரண்டு ஆண்டுகளுக்கு, 100 மாணவர்களை சேர்க்கலாம். இந்த கல்லுாரிகளில், எட்டு பேர் நிரந்தர ஆசிரியர்களாக இருக்க வேண்டும்.
இந்த ஆசிரியர்களின் பட்டியலை, பல்கலையில் ஆவணங்களுடன் அளித்தால் மட்டுமே, கல்லுாரிகள் மாணவர்களை சேர்ப்பதற்கான அங்கீகாரம் வழங்கப்படும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
My Blogger Tricks