தொகுப்பூதிய காலத்தைக் கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்க ஆசிரியர்கள் கோரிக்கை

தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கான 50 சதவீத தொகுப்பூதிய பணிக்காலத்தைக் கணக்கிட்டு உரிய ஓய்வூதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்புக் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அந்த கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் கூறியதாவது:

1978 முதல் 1990 வரை தொழிற்கல்வி ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தின் அடிப்படையில் பணியாற்றினர். அதன்பிறகுதான் பணி வரன்முறை செய்யப்பட்டது. இந்த நிலையில் தொகுப்பூதிய காலத்தில் 50 சதவீதத்தைக் கணக்கிட்டு, தகுதியுள்ளவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இதில், ஆசிரியர்களுக்கு சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டது. எனினும் அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் ஓய்வூதியம் இதுவரை வழங்கப்படவில்லை.


தற்போது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுத்த வேலூர் மாவட்ட ஆசிரியர் பி.ராகவேந்திரனுக்கு, 50 சதவீதத் தொகுப்பூதிய காலத்தைக் கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை செயலர் சபிதா உத்தரவிட்டுள்ளார். அவரைப் போன்றே, ஏற்கெனவே சாதகமான தீர்ப்பு பெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் உரிய ஓய்வுத்தொகை வழங்க வேண்டும் என முதல்வர், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், முதன்மைச் செயலர் ஆகியோருக்கு கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை விடுக்கப்படுகிறது. என்றார் அவர்.