புதிய கல்விக் கொள்கைக்காக கருத்து கேட்பு: கால அவகாசத்தை நீட்டிக்க வலியுறுத்தல்

புதிய கல்விக் கொள்கை முன்மொழிவு மீது கருத்து கோட்புக்கான கால அவகாசத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஜெயலலிதா ஆகியோருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கை முன்மொழிவு குறித்து கருத்துகளைத் தெரிவிக்க கொடுக்கப்பட்டுள்ள கால அவகாசம் மிகக் குறைவாகும்.
இந்த முன்மொழிவை அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியிட்டு, அதன் மீது கருத்துத் தெரிவிப்பதற்கான கால அவகாசத்தை 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும். முன்மொழிவில் சில அம்சங்கள், மாநில அரசின் அதிகாரங்களை மத்திய அரசு எடுத்துகொள்வதாக அமைந்துள்ளன.
குழந்தைகளின் எதிர்காலம் குறித்த மிக முக்கிய கொள்கை ஆவணம் என்பதால் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் கலந்தாலோசித்து தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.