அண்ணா பல்கலை மூலம் பி.ஆர்க்., படிப்பில்
சேர, 2,600 பேர் விண்ணப்பித்து உள்ளனர். ஜூலை இறுதி வாரம், கவுன்சிலிங்
நடத்தப்படும் என தெரிகிறது. அண்ணா பல்கலையில் தற்போது, பி.இ., - பி.டெக்.,
படிப்புக்கான பொதுப்பிரிவு கவுன்சிலிங், 27ல் துவங்கி நடந்து வருகிறது.
இந்நிலையில், அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள,
41 பி.ஆர்க்., கல்லுாரிகளில், பி.ஆர்க்., படிப்புக்கு, 'ஆன்லைனில்'
விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. 9ம் தேதி விண்ணப்ப பதிவு முடிந்தது.
மொத்தம், 2,589 பேர் விண்ணப்பித்து உள்ளனர் . மொத்தமுள்ள, 2,400 இடங்களில்,
1,700 இடங்களுக்கு கவுன்சிலிங் மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
தற்போது, விண்ணப்ப பரிசீலனை நேற்று முன்தினம் துவங்கியது. 'நாட்டா'
எனப்படும், தேசிய ஆர்க்கிடெக்ட் நுழைவுத்தேர்வு மதிப்பெண் மற்றும் பிளஸ் 2
தேர்வு மதிப்பெண் படி, தரவரிசைப் பட்டியல் தயார் செய்யப்படும். நாட்டா
தேர்வு எழுதாதவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். தரவரிசைப்படி,
மாணவர்களுக்கான கவுன்சிலிங், இம்மாத இறுதி வாரம் துவங்கும் என, அண்ணா
பல்கலை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.