பெண்கல்வி ஊக்கத்தொகை : ஆதார் எண் கட்டாயம்

     பெண்கல்வி ஊக்கத் தொகை பெற ஆதார் எண் கட்டாயம் சமர்பிக்க வேண்டும், என, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் 18 வயது

நிறைவடைந்த தாழ்த்தப்பட்ட மாணவிகளுக்கு பெண் கல்வி ஊக்கத்தொகையாக ரூ.3,000 வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் கல்வியாண்டு இறுதியில் தொகை அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

கடந்த ஆண்டு முதல் ஆன்-லைன் முறையில் உதவித்தொகை வழங்கும் பணி நடக்கிறது. இதற்காக 9ம் வகுப்பு படிக்கும் எஸ்.சி., மாணவிகள் தேர்வு செய்யும் பணி தற்போது நடக்கிறது. உதவித்தொகை கேட்டு விண்ணப்பிக்கும் மாணவிகள் தங்களின் ஆதார் எண்ணை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.


மாணவிகள் 18 வயது நிறைவடையும் போதுதான் உதவித்தொகை அவர்களுக்கு கிடைக்கும் நிலையில், பல மாணவிகள் தங்களின் வங்கி கணக்கை மாற்றிவிடுவதால், உதவித்தொகை வழங்க முடியாத நிலை ஏற்படுகிறது.
இதனை தவிர்க்கும் வகையில் ஆதார் எண் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டால், அவர்கள் வேறு வங்கி கணக்கு துவக்கினாலும் சிக்கல் இல்லை. ஆதார் எண்ணை பயன்படுத்தி புதிய வங்கி கணக்கில் பணத்தை செலுத்த முடியும்.

எனவே, மாணவிகள் ஆக.,31க்குள் ஆதார் எண் பெற்று வழங்க வேண்டும். இதற்காக பள்ளிகளில் சிறப்பு குழு அமைத்து ஆதார் எண் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.