தமிழகத்தில் துணை மருத்துவப்
படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் குறித்த அறிவிப்பு ஒரு சில நாள்களில்
வெளியாக வாய்ப்புள்ளது என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அதிகாரிகள்
தெரிவித்தனர்.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக்
கல்லூரிகளில் பி.எஸ்சி நர்சிங், இயன்முறை மருத்துவம் (பிஸியோதெரபி),
பி.எஸ்சி ரேடியாலஜி, பி.எஸ்சி ரேடியோதெரபி டெக்னாலஜி, கார்டியோ பல்மனரி
பெர்ஃபூஷன் டெக்னாலஜி, பி.எஸ்சி ஆப்தோமெட்ரி உள்ளிட்ட துணை மருத்துவப்
படிப்புகள் வழங்கப்படுகின்றன.
சுயநிதிக் கல்லூரிகள்: அரசு கல்லூரிகள்
தவிர, சுயநிதிக் கல்லூரிகளில் பி.எஸ்சி நர்சிங், பி.ஃபார்ம், இயன்முறை
மருத்துவம் ஆகிய படிப்புகளுக்கு சுமார் 6 ஆயிரத்துக்கு மேற்பட்ட இடங்கள்
உள்ளன.
விண்ணப்பம் தாமதம்: எம்.பி.பி.எஸ்.
படிப்புக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு, முதற்கட்ட கலந்தாய்வு நடைபெற்று
முடிந்தவுடன் துணை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் விநியோகம்
தொடங்குவது வழக்கம். கடந்த ஆண்டு ஜூலை 6-ஆம் தேதி விண்ணப்ப விநியோகம்
தொடங்கியது.
ஆனால் இந்தக் கல்வியாண்டில் எம்.பி.பி.எஸ்.
முதற்கட்ட கலந்தாய்வு ஜூன் 25-ஆம் தேதி நிறைவடைந்தது. இருப்பினும், துணை
மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் குறித்த அறிவிப்பு இதுவரை
வெளியாகவில்லை.
இதுதொடர்பாக மருத்துவக் கல்வி தேர்வுக் குழு
உயர் அதிகாரி கூறியபோது, "துணை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப
விநியோகம் குறித்த அரசாணை திங்கள்கிழமை வெளியிடப்படும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. அரசாணை வெளியானதும், அறிவிப்பு வெளியிடப்பட்டு
விண்ணப்ப விநியோகம் தொடங்கும்' என்றார்.