பிளஸ் 2 மாணவர்களுக்கு விரைவில் சிறப்பு கையேடு

ராமநாதபுரம்: பிளஸ் 2 மாணவர்களுக்கு இந்தாண்டு முன் கூட்டியே இலவச சிறப்பு கையேடு வழங்கப்படுகிறது.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: பிளஸ் 2 'ப்ளூ' பிரின்ட் அடிப்படையில், கடந்த ஆண்டு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச கற்றல் கையேடு வழங்கப்பட்டது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இதனை தயாரித்தது.
இந்த நிலையில் நடப்பு ஆண்டில் முன்கூட்டியே கையேடு வழங்கப்படுகிறது. மழைவெள்ளம் பாதித்த சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார் மாவட்ட மாணவர்களுக்கு கற்றல் கையேட்டுடன் மன நல ஆலோசனையும் வழங்கப்பட்டதால் தேர்வில் அதிகளவு தேர்ச்சி பெற முடிந்தது.
இதையடுத்து, தற்போது பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது. தேர்ச்சி பெற முடியாதவர்கள் தேர்ச்சி பெறவும், சராசரியாக படிப்பவர்கள் அதிக மதிப்பெண் பெறவும், நல்ல மதிப்பெண் பெறுவோர் மாநில ரேங்க் பெறவும் இந்த சிறப்பு கையேடு உதவும். இதற்காக ஆசிரியர்களை ஊக்கப்படுத்தும் வகையில், புத்தாக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. ஏற்கனவே ஒவ்வொரு பாடத்திலும் அனுபவம் வாய்ந்த முதுநிலை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இவர்கள் மூலம் இதர ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட்டில் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.