கலந்தாய்வு தாமதம் இடமாற்றம் ஆரம்பம்-DINAMALAR

ஆசிரியர்களுக்கு விருப்ப இடமாறுதல் கலந்தாய்வு தாமதமாகும் நிலையில், பல இடங்களில் இடமாற்றம் நடப்பதாக புகார் எழுந்தது.
ஆசிரியர்களின் இடமாறுதல், பணி உயர்வு உத்தரவுகள், முதன்மைக் கல்வி அலுவலகங்களின் வழியே, 'ஆன்லைனில்' வழங்கப்படும். முதலில், விருப்ப இடமாறுதல் கலந்தாய்வு என அறிவிக்கப்பட்டது;

இப்போது, அதிகாரிகள், அமைச்சர்கள், ஆசிரியர் சங்கங்களின் சிபாரிசு அடிப்படையிலான இடமாறுதலாக மாறி விட்டது.இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில், கலந்தாய்வு எப்போது நடைபெறும் என, பள்ளிக் கல்வி அதிகாரிகளுக்கே இன்னும் தகவல் இல்லை. துறை செயலர் சவீதா தான் முடிவு செய்வார் என காத்திருக்கின்றனர்.இதற்கிடையில், கலந்தாய்வு தேதி அறிவிக்கும் முன், பல முக்கியமான இடங்கள் குறிப்பாக, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, திருச்சி, 
திண்டுக்கல், கோவை, திருப்பூர் மற்றும் சென்னை போன்ற மாவட்டங்களில் உள்ள காலி இடங்களுக்கு, சிபாரிசு அடிப்படையில் இடமாறுதல் வழங்கப்படுவதாக, புகார் எழுந்துள்ளது.
எனவே, காலியிடங்கள் மறைக்கப்படவோ, விதிகளை மீறி நிரப்பப்படவோ, எந்த உத்தரவும் பிறப்பிக்காமல், விரைவில் ஆசிரியர் கலந்தாய்வை அறிவிக்க வேண்டும் என, ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.