பழைய ஓய்வூதியத் திட்டத்தையே
செயல்படுத்துவது குறித்து, வல்லுநர் குழுவின் பரிந்துரைப்படி நடவடிக்கை
எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார்.
சட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்
தீர்மானத்தின் மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் ஐ.பெரியசாமி (ஆத்தூர்)
செவ்வாய்க்கிழமை பேசினார். அப்போது, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே
செயல்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.
இதற்கு, நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பதில்:
பல்வேறு அரசு ஊழியர்கள் சங்கங்கள் தொடர்ந்து தங்களது
கோரிக்கையில் பங்களிப்புடன்கூடிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய
ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தி வருகின்றன. இந்தக்
கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்க வல்லுநர் குழு அமைக்கப்படும் என முதல்வர்
ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அவரது அறிவிப்புப்படி, பழைய ஓய்வூதியத் திட்டத்தைத்
தொடர்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அரசுக்கு பரிந்துரை செய்ய
வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன என்றார் ஓ.பன்னீர்செல்வம்.