எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு அட்டவணை வெளியீடு:அழைப்புக் கடிதம் அவசியம் இல்லை

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
 
             கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதங்கள் தனித் தனியாக அனுப்பப்பட மாட்டாது. இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும். அழைப்புக் கடிதம் இல்லாமலும் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.

தமிழகத்தில் அரசு எம்.பி. பி.எஸ். இடங்கள் 2,383, சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 470 என மொத்தம் 2,853 இடங்கள் உள்ளன. அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 85 பிடிஎஸ் இடங்கள், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் மாநில
அரசு ஒதுக்கீட்டு பிடிஎஸ் இடங்கள் 970 என மொத்தம் 1,055 இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
20-ஆம் தேதி முதல்:
 வரும் 20-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் கலந்தாய்வு நடைபெறவுள்ளது. இதற்கான அட்டவணை ஜ்ஜ்ஜ்.ற்ய்ட்ங்ஹப்ற்ட்.ர்ழ்ஞ், ஜ்ஜ்ஜ்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய் ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு: ஜூன் 20-ஆம் தேதி சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு காலை 9 மணிக்குத் தொடங்கும். மாற்றுத்திறனாளிகளுக்கான 3 சதவீத இடஒதுக்கீட்டுக்கு, கலந்தாய்வில் பங்கேற்க 92 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.
அதேபோன்று முன்னாள் ராணுவ வீரர்களுக்கான வாரிசுகளுக்கு 5 எம்.பி.பி.எஸ். இடங்கள், ஒரு பி.டி.எஸ். இட ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வில் பங்கேற்க 60 மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். விளையாட்டு வீரர்களுக்கான 3 இடங்களுக்கு தகுதியான மாணவர்களை அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு செய்யும்.
பொதுப் பிரிவு: ஜூன் 21-ஆம் தேதியிலிருந்து பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும். கட்-ஆஃப் மதிப்பெண் 200-லிருந்து 198 வரை பெற்றவர்கள் ஜூன் 21-ஆம் தேதி நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
அழைப்புக் கடிதம் கிடையாது: கலந்தாய்வில் பங்கேற்பதற்கு விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியாக அழைப்புக் கடிதம் அனுப்பப்படவில்லை. மாணவர்கள், இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அழைப்புக் கடிதம் இல்லாவிட்டாலும் கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும் அட்டவணையைக் கொண்டு கலந்தாய்வில் மாணவர்கள் பங்கேற்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பழைய மாணவர்களுக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 2016-2017 ஆம் கல்வியாண்டுக்கான எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்புகளில் சேர கடந்த ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்த 3,266 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
கடந்த கல்வி ஆண்டில் (2015-16) எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்புகளில் சேர 4,679 மாணவர்கள் விண்ணப்பித்தனர். அவர்களில் 544 பேர் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர தேர்வு செய்யப்பட்டனர்.
நிகழ் கல்வி ஆண்டில் (2016-17) எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கான கட்-ஆஃப் மதிப்பெண் குறைந்துள்ளதையடுத்து, விண்ணப்பித்துள்ள 3,266 மாணவர்களில் 500-க்கும் மேற்பட்ட பழைய மாணவர்களுக்கு படிப்பில் சேரும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
மூன்றாம் பாலினத்தவர்: மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர்களைக் காட்டிலும், மாணவிகளே அதிகம் விண்ணப்பித்துள்ளனர். அதன்படி, 9,017 மாணவர்களும், 16,361 மாணவிகளும் விண்ணப்பித்துள்ளனர். மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் இந்தப் படிப்புக்கு விண்ணப்பித்துள்ளார். 50 வயதுக்கு மேற்பட்ட இவர், மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கு தகுதி உள்ளது என்றாலும், மிகக் குறைந்த கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளதால், மருத்துவ இடம் கிடைப்பதற்கு சாத்தியமில்லை என்று தேர்வுக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த கல்வியாண்டிலும் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த ஒருவர் இந்தப் படிப்புக்கு விண்ணப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.