நகர்ப்புற உள்ளாட்சிக்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளிலும் கண்காணிப்பு கேமரா

நகர்ப்புற உள்ளாட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள, அனைத்து பள்ளிகளிலும், கண்காணிப்பு கேமரா பொருத்த அரசு உத்தரவிட்டுள்ளது. 'தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், பொது இடங்களில், பொது மக்கள் வந்து செல்லும் இடங்களில், கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்' என, போலீஸ் டி.ஜி.பி., அனுப்பிய கடிதம் அடிப்படையில், பொது இடங்களில், கண்காணிப்பு கேமரா பொருத்த அனுமதி அளித்து, 2012 டிச., 14ல் அரசாணை வெளியிடப்பட்டது.
'பொது கட்டடம் என்றால், பொதுமக்கள் வந்து செல்லும் இடமாக கருதப்பட வேண்டும்' என, விதிமுறையில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல், மேல்நிலைப்பள்ளி, கல்லுாரி, பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்களில், தனியார் கல்வி நிறுவனங்கள் உட்பட, கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். நுாறு பேருக்கு மேல் தங்கியிருக்கும் விடுதிகளிலும், கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். மருத்துவமனை, தாய் - சேய் நல விடுதி, மருத்துவ கிளினிக், திருமண மண்டபம், வங்கி, ஏ.டி.எம்., மையம், இன்சூரன்ஸ் நிறுவனம், வணிக வளாகம், பெட்ரோல் பங்க், தொழிற்சாலைகள், பஸ் நிலையம், பஸ் நிறுத்தம், ஓட்டல், கிளப் போன்றவற்றிலும், கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என, தெரிவிக்கப்பட்டது. இவ்விதிகளில், அரசு மேல்நிலைப் பள்ளிகள் என்பதை மாற்றி, 'பள்ளிகள்' என, திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை, இம்மாதம், 21ம் தேதி வெளியிடப்பட்டது. இதன்படி, அனைத்து பள்ளிகளிலும், கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.