போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி: எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான முழுச் செலவையும் ஏற்க மத்திய அரசு முடிவு

போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி பெறும் பிற்படுத்தப்பட்ட (எஸ்சி), பழங்குடியின (எஸ்டி) மாணவர்களுக்கு பயிற்சிக் காலத்தில் ஆகும் முழுச் செலவையும் மத்திய அரசே இனி ஏற்க முடிவு செய்துள்ளது.
முன்பு, எஸ்சி, எஸ்டி, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்கள், போட்டித் தேர்வுகளில் பங்கேற்பதற்காக பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து பயில்வதற்கு ரூ.20,000 உதவித் தொகையை மத்திய அரசு வழங்கி வந்தது.
இந்நிலையில், இந்தப் பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு பயிற்சிக் காலத்தில் ஆகும் மொத்த செலவையும் மத்திய அரசே ஏற்கும் வகையில், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகம், அண்மையில் திருத்தம் ஒன்றை மேற்கொண்டது.
இதுகுறித்து அந்த அமைச்சகத்தின் உயரதிகாரி, தில்லியில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
எஸ்சி, எஸ்டி, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பைப் பெற பல்வேறு வகையான போட்டித் தேர்வுகளை எழுத வேண்டியுள்ளது. இதற்கு பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து மாணவர்கள் பயிற்சி பெறுகின்றனர். இனி, பயிற்சிக் காலத்தில் ஆகும் மொத்த செலவையும் மத்திய அரசே ஏற்கும். மாணவர்களுக்கு சிறப்பான பயிற்சியை அளிக்க புகழ்பெற்ற பயிற்சி நிறுவனங்கள் அட்டவணைப்படுத்தப்பட்டு வருகின்றன.
மாநில அரசுகளும், யூனியன் பிரதேச அரசுகளும் மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளில் பங்கேற்க பயிற்சி அளிக்க சிறந்த பயிற்சி நிறுவனங்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார். குடும்பத்தினரின் ஒட்டுமொத்த ஆண்டு வருவாய் ரூ.6 லட்சத்துக்கும் குறைவாக இருக்கும் பட்சத்தில், இந்தத் திட்டத்தின் கீழ் எஸ்சி, எஸ்டி, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் பலன் பெற முடியும்.