எம்.பி.பி.எஸ்., தர வரிசையில் முதலிடம் பெறுவது எப்படி?

பிளஸ் 2 தேர்வில், மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவி ஆர்த்தி, எம்.பி.பி.எஸ்., தர வரிசை பட்டியலில், 10ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். மாநில ரேங்க் பெறாத மாணவர், தர வரிசையில், இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை, வித்யாமந்திர் பள்ளி மாணவியான ஆர்த்தி, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். கணிதம், வேதியியல் மற்றும் உயிரியலில், தலா, 200 மதிப்பெண்களும்; இயற்பியலில், 199 மதிப்பெண்ணும் எடுத்தார். இவரது கட் - ஆப் மதிப்பெண், 199.75 ஆனதால், 10ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
அதே பள்ளியைச் சேர்ந்த ஜஸ்வந்த் என்ற மாணவர், பிளஸ் 2 தேர்வில், மாநில அளவில், முதல் இடம் பெற்றார். இவரும், கணிதம், வேதியியல் மற்றும் உயிரியலில், தலா, 200 மதிப்பெண்களும்; இயற்பியலில், 199 மதிப்பெண்ணும் எடுத்தார். இவரது கட் - ஆப் மதிப்பெண், 199.75. இவர் பொதுப் பிரிவான ஓ.சி.,யைச் சேர்ந்தவர் என்பதாலும், பிறந்த தேதி அடிப்படையிலும், முதல், 10 இடங்களில் வர முடியாமல், 17வது இடத்தைப் பிடித்துள்ளார்.
அதேபோல், தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு பகுதி மாணவர் விக்னேஷ், பிளஸ் 2 தேர்வில், மாநிலத்தில் முதல் இடம் என்றாலும், தர வரிசையில், இரண்டாம் இடமே கிடைத்துள்ளது. 'இதன் மூலம் மாநில ரேங்க் பெறுவதை விட, மருத்துவம், இன்ஜி., படிப்புக்கான கட் - ஆப் மதிப்பெண் பெறும் வகையில், அதற்கான முக்கிய பாடங்களில் முதலிடம் பெறுவதே, உயர் கல்வியில் முதலிடம் தரும் என்பதை மாணவர்களும், பெற்றோரும் புரிந்துகொள்ள வேண்டும்' என, கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.