சான்றிதழில் சாதி, மதத்தைக் குறிப்பிட நிர்பந்திக்கக் கூடாது:அரசாணையை விளம்பரப்படுத்த உயர்நீதிமன்றம் ஆணை

கல்விச் சான்றிதழ்களில் சாதி, மதத்தைத் தெரிவிக்கும்படி நிர்பந்தம் செய்யக்கூடாது என்ற அரசாணை குறித்து, தமிழக அரசு பரவலாக விளம்பரப்படுத்த வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஜி.பாலகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், "இந்தியாவில் பல்வேறு மதம், சாதிய அமைப்புகள் உள்ளன. இதன் தாக்கத்தால், நாட்டின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டம், சகோதரத்துவம், சுதந்திரம், சமத்துவம் ஆகிய கொள்கையின் அடிப்படையில் சாதியில்லா சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
விழிப்புணர்வு இல்லை: தமிழகம் சமூக நீதி, ஒற்றுமையை நிலைநாட்டும் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. கடந்த 1973-ஆம் ஆண்டு, ஜூலை 2-ஆம் தேதி தமிழகக் கல்வித் துறை ஒரு அரசாணையை பிறப்பித்தது. அதில், சாதி, மதம் போன்ற விவரங்களை பள்ளிச் சான்றிதழ், பள்ளி மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றில் குறிப்பிட விரும்பவில்லை எனில், அதைக் கல்வி நிறுவனங்கள், பள்ளி நிர்வாகத்தினர் அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. முக்கியத்துவம் பெற்ற இந்த அரசாணையை பற்றி, பொது மக்களிடையே போதிய விழிப்புர்ணவு இல்லை. ஆகையால், பெரும்பாலான மக்களுக்கு இந்த அரசாணை குறித்து தெரியவில்லை.
இந்த நிலையில், 1973-ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணையை வலியுறுத்தி, 2000-ஆம் ஆண்டு ஜூலை 31- இல் மற்றும் ஒரு அரசாணையை தமிழக கல்வித் துறை வெளியிட்டது. இது குறித்தும், மக்களிடம் போதுமான அளவில் முன்னெடுத்துச் செல்லவில்லை.
எனவே, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் மாற்றுச் சான்றிதழில் (டி.சி.யில்) கண்டிப்பாக சாதி, மதத்தை குறிப்பிட வேண்டும் என்று மாணவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் நிர்பந்தம் செய்கின்றனர்.
அரசுக்கு உத்தரவிட வேண்டும்: இதனால், சாதி, மதம் போன்றவற்றை கைவிட வேண்டும் என்று நினைக்கும் மக்கள் விரக்திக்கு ஆளாகின்றனர். பள்ளி சான்றிதழில் சாதி, மதத்தைத் தெரிவிக்க மாணவர்களை நிர்பந்தம் செய்யக்கூடாது என்று, கடந்த 5-ஆம் தேதி உயர் கல்வித்துறை செயலாளர், பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உள்ளிட்டோருக்கு கோரிக்கை மனு அனுப்பினேன். இதற்கு, இதுவரை எந்தவித பதிலும் வரவில்லை.
இட ஒதுக்கீடு சலுகைகளைப் பெற விரும்பும் நபர்களைத் தவிர, பிற மாணவர்களை பள்ளி மாற்றுச் சான்றிதழில் சாதி, மத விவரங்களை தெரிவிக்க வேண்டும் என வற்புறுத்தக் கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தார்.
இந்த மனுவுக்கு தமிழக அரசின் கருத்தைக் கேட்டு தெரிவிக்கும்படி, அரசு வழக்குரைஞர் ஜெயபிரகாஷ் நாராயணனுக்கு உயர்நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்பு, புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
நிர்பந்திக்கக் கூடாது: கல்விச் சான்றிதழ்களில் சாதி, மதம் போன்ற விவரங்களை குறிப்பிட விரும்பாத பெற்றோர்களை பள்ளி, கல்வி நிர்வாகங்கள் நிர்பந்தம் செய்யக்கூடாது. இது தொடர்பாக, ஏற்கெனவே தமிழக அரசால் வெளியிடப்பட்ட அரசாணையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அரசாணை தொடர்பாக, தமிழக அரசு பரவலாக விளம்பரப்படுத்த வேண்டும். இந்த வழக்கைப் பொருத்தவரை, கல்விச் சான்றிதழ்களில் சாதி, மதத்தை குறிப்பிட விரும்பாதவர்களை பள்ளி நிர்வாகங்கள் நிர்பந்திக்கக் கூடாது.
இருப்பினும், மாற்றுச் சான்றிதழில் பெற்றோர் சிலர் சாதி, மதத்தை குறிப்பிட விரும்புகின்றனர். எனவே, கல்வி நிறுவனங்கள், பள்ளி நிர்வாகங்கள் பெற்றோர் விருப்பத்துக்கேற்ப முடிவு செய்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டு, நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.