755 எம்.பி.பி.எஸ்., இடம் மட்டுமே காலி

மருத்துவக் கலந்தாய்வில், அரசு கல்லுாரிகளில், இதுவரை, 1,563 எம்.பி.பி.எஸ்., இடங்கள் நிரம்பி விட்டன; மீதம், 755 இடங்கள் மட்டுமே உள்ளன. சென்னையில் உள்ள அரசு கல்லூரி இடங்கள், 95 சதவீதம் நிரம்பி விட்டன. எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான கலந்தாய்வு, சென்னை, அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நடந்து வருகிறது.
பொதுப்பிரிவில், இரண்டாம் நாள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட, 853 பேரில், 832 பேர் பங்கேற்றனர். ஒருவர் தவிர, 831 பேர் படிப்புக்கான இடங்களை தேர்வு செய்தனர். அரசு கல்லூரியில், 768 பேர்; இ.எஸ்.ஐ., கல்லுாரியில், 25 பேர்; சுயநிதி கல்லூரிகளில், 25 பேர் எம்.பி.பி.எஸ்., இடங்களையும்; இரண்டு பேர் அரசு கல்லூரியில், பி.டி.எஸ்., இடங் களையும் தேர்வு செய்தனர். அரசு கல்லுாரிகளில், 2,318 இடங்களில், 1,563 இடங்கள் நிரம்பி விட்டன; 755 இடங்கள் தான் காலியாக உள்ளன. சுய நிதி கல்லூரிகளில் உள்ள, 470 இடங்களில், 434 இடங்கள் காலியாக உள்ளன. சென்னையில் உள்ள பிற அரசு மருத்துவக் கல்லுாரிகளில், ஆதிதிராவிடர், பழங்குடியினர் இடங்கள் தவிர மற்ற இடங்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன. பொதுப் பிரிவு இடங்களுக்கான கலந்தாய்வு, இன்றுடன் நிறைவடைகிறது. அடுத்த, இரண்டு நாட்களில் பிற பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடக்க உள்ளது.