அரசு ஊழியர் மருத்துவ காப்பீடு:ரூ.7.50 லட்சமாக உயர்வு

மதுரை;தமிழக அரசுத் துறைகள், உள்ளாட்சி அமைப்பு, பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலை ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் 2007ல் ரூ.2 லட்சம் வழங்கப்பட்டது. ஊழியர்களின் சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்து, தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் விட்டு,
நான்கு ஆண்டுகளாக இத்திட்டம் செயல்படுகிறது. இத்தொகையை ரூ.4 லட்சமாக உயர்த்தி 2012 ஏப்.,27ல் அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், இத்திட்டத்தை மேலும் நான்கு ஆண்டுகளுக்கு தொடரவும், மருத்துவ காப்பீடு தொகையை ரூ.7.50 லட்சமாக உயர்த்தவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட செயலர் கிருஷ்ணன் கூறியதாவது: மருத்துவ காப்பீடு தொகையை உயர்த்தியது வரவேற்கத்தக்கது. இருப்பினும் 'காசில்லாமல் சிகிச்சை' என்ற நோக்கத்துடன் அரசு மருத்துவ காப்பீடு திட்டத்தை ஊழியர்களுக்கு செயல்படுத்துகிறது. சில மருத்துவமனைகளில், 'முன்பணம் செலுத்தினால் மட்டுமே சிகிச்சை அளிக்க முடியும்' என அரசு ஊழியர்களை நிர்பந்திக்கின்றனர். இதுபோன்ற குறைகளையும் நிவர்த்தி செய்ய வேண்டும், என்றார்.