4 ஆண்டு பி.ஏ., - பி.எட்., படிப்புக்கு அங்கீகாரம்.

ஒருங்கிணைந்த, பி.ஏ.,- பி.எட்., மற்றும் பி.எஸ்சி., -பி.எட்., நான்கு ஆண்டு படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்குவது குறித்து பரிசீலிக்கும்படி, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
.புதுச்சேரி, திருக்கானுார், வாழப்பாடியார் நகரில் உள்ள, உஷா லட்சுமணன் கல்வியல் கல்லுாரி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு:
கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு உயர் கல்வி வழங்கும் வகையில், 1999- 2000ல் எங்கள் கல்லுாரி துவங்கப்பட்டது. 2004- 05ல் பி.எட்., படிப்புக்கு தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அங்கீகாரம் வழங்கியது. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் விதிகளையும், புதுச்சேரி பல்கலையின் நிபந்தனைகளையும் பூர்த்தி செய்து வருகிறோம்.இந்நிலையில், ஒருங்கிணைந்த, பி.ஏ., - பி.எட்., மற்றும் பி.எஸ்சி., - பி.எட்., என்ற புதிய நான்கு ஆண்டு கால படிப்பை துவங்க, அங்கீகாரமும், அனுமதியும் வழங்கக் கோரி,தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலுக்கும், புதுச்சேரி பல்கலைக்கும் விண்ணப்பித்தோம்; எந்த பதிலும் இல்லை.
எனவே, ஒருங்கிணைந்த பி.ஏ., -பி.எட்., மற்றும் பி.எஸ்சி., - பி.எட்., நான்கு ஆண்டு படிப்புக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்கும்படி, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலுக்கும்; நிரந்தர இணைப்பு வழங்கும்படி, புதுச்சேரி பல்கலைக்கும்உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கோரப்பட்டது.மனுவை விசாரித்த நீதிபதி சத்தியநாராயணன், மனுதாரரான கல்லுாரி அளித்த விண்ணப்பத்தை பரிசீலித்து, ஜூன், 8க்குள் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலுக்கு உத்தரவிட்டார்.