எம்.சி.ஏ., எம்.பி.ஏ. படிப்புகளில் சேருவதற்கான ‘டான்செட்’ என்ற பொது நுழைவுத்தேர்வு தமிழகம் முழுவதும் 34 மையங்களில் நடந்தது

தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் எம்.சி.ஏ., எம்.பி.ஏ., எம்.இ. ஆகிய படிப்புகளில் சேருவதற்கு ‘டான்செட்’ என்ற பொது நுழைவுத்தேர்வு அவசியம். இதில் எம்.சி.ஏ., எம்.பி.ஏ. படிப்புகளில் சேருவதற்கான பொது நுழைவுத்தேர்வு நேற்று நடந்தது.
இந்த தேர்வை சென்னை (அண்ணா பல்கலைக்கழகம்), திருச்சி, ஈரோடு, மதுரை, கோவை, நாகர்கோவில், திருநெல்வேலி உள்ளிட்ட 15 நகரங்களில் உள்ள 34 மையங்களில் மாணவ–மாணவிகள் எழுதினார்கள்.

எம்.சி.ஏ. படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வு நேற்று காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெற்றது. இந்த தேர்வை எழுதுவதற்காக மொத்தம் 6 ஆயிரத்து 324 மாணவ–மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். இதேபோல், எம்.பி.ஏ. படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வு பிற்பகல் 2.30 மணி முதல் 4.30 மணி வரை நடந்தது. இந்த தேர்வுக்கு 16 ஆயிரத்து 559 மாணவ–மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். இந்த தேர்வுக்கான ஏற்பாடுகளை அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் மல்லிகா செய்து இருந்தார்.

எம்.இ. படிப்பில் சேருவதற்கான பொது நுழைவுத்தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. அந்த தேர்வுக்கு 17 ஆயிரத்து 47 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.