2,300 பேருக்கு மதிப்பெண் அதிகரிப்பு விடைத்தாள் மதிப்பீடு செய்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை

பிளஸ்-2 தேர்வில் மறு கூட்டல், மறுமதிப்பீடு செய்ததில் 2,300 பேருக்கு மதிப்பெண் கூடுதலாக வந்துள்ளது. எனவே முதலில் விடைத்தாள்களை மதிப்பீடு செய்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

பிளஸ்-2 தேர்வு

கடந்த மார்ச் மாதம் 4-ந் தேதி முதல் ஏப்ரல் 1-ந் தேதிவரை பிளஸ்-2 தேர்வு நடைபெற்று, முடிவுகள் வெளியிடப்பட்டது. தேர்வில் அதிக மதிப்பெண் வரும் என்று எதிர்பார்த்தவர்கள் முடிவில் எதிர்பார்த்த மதிப்பெண் இல்லாதாதால் ஏமாற்றம் அடைந்தனர். 

அவர்களில் 3,378 பேர் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தனர். மறு கூட்டலுக்கு 2 ஆயிரத்து 707 பேர் விண்ணப்பித்தனர். 

ஆசிரியர்களின் குளறுபடி

மறுமதிப்பீட்டில் 2,200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு மதிப்பெண் மாற்றம் இருந்தது. ஏராளமான மாணவ-மாணவிகளுக்கு மதிப்பெண் கூடுதலாக வந்துள்ளது. 5 முதல் 10 மதிப்பெண் அதிகமாக வந்துள்ளது. 

சில பக்கங்கள் மதிப்பீடு செய்யாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மறுகூட்டலில் 56 பேருக்கு மதிப்பெண் அதிகரித்துள்ளது. 

குறிப்பாக ஒரு மாணவருக்கு 187 மதிப்பெண்ணுக்கு பதிலாக 87 மதிப்பெண் என்று போடப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மதிப்பீடு செய்ததில் பல குளறுபடிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் 2 ஆயிரத்து 300 பேருக்கு மதிப்பெண் அதிகரித்துள்ளது. 

ஆசிரியர்கள் மீது நடவடிக்கை

எனவே சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக அவர்கள் மீது 17 பி குற்றம் சுமத்தப்படவேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகத்திற்கு, அரசு தேர்வுத்துறை சிபாரிசு செய்துள்ளது. சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது விசாரணை நடைபெறும் என்றும் தெரிகிறது.