சென்னிமலை கிராமிய அஞ்சல் நிலையத்தில் அஞ்சல் அலுவலர் பணிக்குத்
தகுதியுடையவர்கள் ஜூலை 11-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று ஈரோடு
கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் குருநாதன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு தலைமை அஞ்சல் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னிமலை தபால்
அலுவலகத்தின்கீழ் இயங்கும் ராமலிங்கபுரம் கிளை அஞ்சல் அலுவலகத்துக்கு
கிராமிய கிளை அஞ்சல் அதிகாரி பதவிக்கான தேர்வு நடைபெற உள்ளது. இந்த பதவி
ஓபிசி வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தகுதியான நபர்கள்
விண்ணப்பிக்கலாம் என்றும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களில் கிராமிய
கிளை அஞ்சல் அதிகாரி ராமலிங்கபுரம்
கிளை அஞ்சலகம் என்ற பதவிக்கான விண்ணப்பம் எனக் குறிப்பிட வேண்டும்.
விண்ணப்பங்களை முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், ஈரோடு கோட்டம், ஈரோடு
638001 என்ற முகவரிக்கு பதிவு அல்லது விரைவு தபாலில் ஜூலை 11-ஆம்
தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு படித்திருப்பதோடு, கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.