சென்னை: பல்வேறு
கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 11 ஆம் தேதி முதல் ரயில்வே ஊழியர்கள்
காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெற்கு ரயில்வே
மஸ்தூர் யூனியன் பொதுச் செயலாளர் என்.கண்ணையா தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்துதல் உள்ளிட்ட 36
அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் ஜுலை 11-ம் தேதி
காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்க உள்ளனர்.
குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம், ரயில்வே துறையில்
தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிடுதல், என்பது உள்ளிட்டவை மத்திய அரசு
ஊழியர்களின் கோரிக்கையில் அடங்கும்.
வேலை நிறுத்தத்திற்கான அறிவிக்கை ஜூன் 9 ஆம் தேதி வழங்க
உள்ளோம். இதுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்தவித நம்பிக்கையும்
ஏற்படவில்லை இந்தப் போராட்டத்தில் வங்கிகள் தவிர மத்திய அரசின் அனைத்து
துறை ஊழியர்களும் ஈடுபடவுள்ளனர் என்றார் கண்ணையா.