சட்ட படிப்பு: ஜூன் 10 முதல் விண்ணப்பம்

தமிழகத்தில் உள்ள, ஏழு அரசு சட்டக் கல்லுாரிகளில் சட்டப் படிப்புக்கான விண்ணப்பங்கள், 10ம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



இதுகுறித்து, தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலை வெளியிட்ட அறிவிப்பு: சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, செங்கல்பட்டு மற்றும் வேலுார் ஆகிய இடங்களில் செயல்படும் சட்டக் கல்லுாரிகளில், பி.ஏ., - எல்.எல்.பி., ஐந்தாண்டு படிப்புக்கு, வரும், 10ம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படும்; 30ம் தேதிக்குள், விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். மூன்றாண்டு எல்.எல்.பி., படிப்புக்கு, வரும், 13ம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, ஜூலை, 15க்குள் அளிக்க வேண்டும்.

விண்ணப்பம் பெற, பல்கலை இணையதளத்தில் http:/tndalu.ac.in வங்கி படிவத்தை பதிவிறக்கம் செய்து, வங்கியில் கட்டணம் செலுத்த வேண்டும். பின், கட்டண ரசீதை காட்டி, விண்ணப்பத்தை கல்லுாரியில் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது