தபால் ஓட்டு செலவு குறைக்க தேர்தல் கமிஷன் புது முயற்சி !

   தபால் செலவை குறைக்க, அனைத்து தொகுதிகளிலும் தபால் ஓட்டுப்பதிவு மையம் அமைக்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

 
          அரசு அலுவலர்கள் தேர்தலில் தபால் மூலமாக, தங்கள் ஓட்டுக்களை பதிவு செய்கின்றனர்.ஓட்டை பதிவு செய்து, சம்பந்தப்பட்ட தொகுதிக்கு அனுப்புவது வழக்கமாக உள்ளது.


தபால் ஓட்டுக்களை, அஞ்சல்துறை மூலமாக அனுப்புவதால் அதிக செலவு ஏற்படுகிறது. செலவை கட்டுப்படுத்த, தபால் ஓட்டுப்பதிவுக்கு, சேவை மையம் அமைக்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: தபால் ஓட்டு நடவடிக்கையால், தொகுதிக்கு, 50 ஆயிரம் ரூபாய் வரை செலவு ஏற்படுகிறது. செலவை குறைக்க, ஒவ்வொரு தொகுதியிலும் தபால் ஓட்டுப்பதிவு சேவை மையம் அமைக்க, உத்தரவிடப்பட்டுள்ளது.இதன்படி, தொகுதியில் பணியாற்றும் அரசு அலுவலர்களுக்கு, ஓட்டுச்சீட்டு வழங்கப்படும்.

 'சீல்' வைத்த பெட்டியில் ஓட்டுச்சீட்டு அடங்கிய தபால் உறை பெறப்படும். பின், அந்தந்த தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பப்படும். இதனால், தேர்தல் அலுவலர்களின் சிரமம் குறையும்; தபால் ஓட்டுப்பதிவு, 100 சதவீதம் நடக்கும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.