புதிய கல்வியாண்டு துவங்கும் நிலையில், தனியார் பள்ளிகளில், சீட்
பெறுவதற்கு, இரவு முழுவதும் கண்விழித்து, பள்ளி வாசலில் தவம் கிடந்து
விண்ணப்பம் பெறும் படலம் காஞ்சிபுரத்திலும் துவங்கி உள்ளது.
தமிழகத்தில், 2015 - 16ம் கல்வியாண்டு முடிந்து, அரசு, தனியார்
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இலவச கட்டாயக்கல்வி உரிமைச்
சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளிலும், 25 சதவீதம் ஏழை குழந்தைகளுக்கு,
சீட் வழங்கப்படும். இதற்காக, விண்ணப்பங்களை அந்தந்த பள்ளிகளில் பெறலாம் என,
மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.
இந்நிலையில், பிரபல தனியார் பள்ளிகளில், தங்கள் குழந்தைகளுக்கு, சீட்
வாங்க, இரவு, பகலாக பெற்றோர் காத்திருக்கும் அவல நிலை, காஞ்சிபுரத்தில்
காணப்படுகிறது. காஞ்சிபுரம், மாமல்லன் நகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில்,
நேற்று காலை, 8:00 மணிக்கு, எல்.கே.ஜி.,க்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும்
என, தெரிவிக்கப்பட்டதால், நேற்று முன்தினம் இரவே, பள்ளி முன் பெற்றோர்
குவிந்தனர்.
இரவு முழுவதும், பள்ளி வாசலில், வரிசை கட்டி அமர்ந்து, நேற்று
விண்ணப்பங்களை பெற்றனர். சென்னை மற்றும் சில நகரங்களில், இதுபோன்ற
செய்திகள் கேள்விப்பட்ட நிலையில், காஞ்சிபுரத்திலும் நடந்துள்ளது
ஆச்சர்யத்தையும், பெற்றோரின் ஆவலையும் வெளிப்படுத்துகிறது.