'கோ-எட்' பள்ளி மாணவர்கள் படிப்பில் கெட்டி: தனியார் ஆய்வில் சுவாரசிய தகவல்

தமிழகத்தில், ஆண்களுக்கான பள்ளிகளில் படிக்கும் மாணவர்களைவிட, 'கோ-எட்' எனப்படும் இருபாலர் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், அதிக அளவில் தேர்ச்சி பெறுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.


          'ரிப்போர்ட் பீ' எனப்படும் தனியார் அமைப்பு, கல்வித் துறையில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. கல்வி முறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து, பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறது.தமிழக அரசு நடத்தும், 10வது மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில், கடந்த நான்கு ஆண்டு தேர்ச்சி விகிதங்கள் குறித்து, இந்த அமைப்பு ஆய்வு செய்தது.அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
* 2012 முதல் 2015 வரையிலான தேர்ச்சி விகிதங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன
* 2015ம் ஆண்டில், பிளஸ் 2 தேர்வை, 6,258 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் எழுதினர். இதில் ஆண்கள் பள்ளிகளில் படித்த மாணவர்களின்
தேர்ச்சி விகிதம், 59.8 சதவீதம். பெண்கள் பள்ளிகளில் படித்த மாணவியரின் தேர்ச்சி விகிதம், 66.2 சதவீதம். அதே நேரத்தில் இருபாலர் பள்ளிகளில் படித்த மாணவர்கள் தேர்ச்சி விகிதம், 63.6 சதவீதம், மாணவியரின் தேர்ச்சி விகிதம், 66.8 சதவீதம்
* பிளஸ் 2 தேர்வில், ஆண்கள் பள்ளியில் படித்த மாணவர்களைவிட, இருபாலின பள்ளியில் படித்த மாணவர்கள் தேர்ச்சி விகித வேறுபாடு, 5.3 சதவீதம் அதிகமாக உள்ளது. அதே நேரத்தில் பெண்களிடம் இந்த வேறுபாடு வெறும், 0.6 சதவீதம் மட்டுமே
* பெரம்பலுார் மாவட்ட மாணவர்களிடம் தான் இந்தவேறுபாடு மிக அதிகமாக, 13.5 சதவீதம் இருந்தது
* கன்னியாகுமரி, திண்டுக்கல், ஊட்டி, நாமக்கல், திருச்சி, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில், இரு பாலின பள்ளியில் படித்தவர்களை விட, ஆண்களுக்கான பள்ளியில் படித்த மாணவர்களின் தேர்ச்சி அதிகமாக உள்ளது. இதற்கு காரணம் இந்த மாவட்டங்களில், கல்வியறிவு விகிதம் மிக அதிகமாக உள்ளது
* பத்தாம் வகுப்பில், விருதுநகரைத் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும், ஆண்கள் பள்ளியில் படித்தவர்களைவிட, இருபாலர் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மன அழுத்தம், ஒழுக்கம், வேலைக்குச் செல்வது, கட்டமைப்பு, விடலைப் பருவம் ஆகிய காரணங்களால், மாணவர்களின் படிப்புத் திறன் வேறுபடக் கூடும்.
இவ்வாறு அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.நன்றி: ரிப்போர்ட் பீ.