கல்வித் தகவல் மேலாண்மை முறையில் 9,40,000 மாணவர்களின் விவரங்கள் பதிவு

கல்வித் தகவல் மேலாண்மை முறையில் இதுவரை 9,40,000 மாணவர்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன்படி, பதிவு செய்வதற்கான கால அவகாசம் மே 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் சார்ந்த தகவல் தொகுப்பு விவரங்கள் ஆண்டுதோறும் கல்வி தகவல் மேலாண்மை முறையில்(இ.எம்.ஐ.எஸ்.) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
இதன்படி, 2015-16-ஆம் கல்வியாண்டிற்காக விவரங்களை மேம்படுத்தும் பணியை மே 10-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. இந்தப் பணியை நிறைவு செய்ய கூடுதல் கால அவகாசம் வேண்டும் என தலைமை ஆசிரியர்கள் கோரியிருந்தனர். அதன்படி, மே 28-ஆம் தேதிக்குள் இந்தப் பணியை நிறைவு செய்ய கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளதாவது:-
15 நாள்களில் அனைத்து மாவட்டங்களிலும் 9,40,000 மாணவர்களின் விவரங்கள் உள்ளீடு செய்யப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது. இந்தப் பணியில் சர்வரின் பயன்பாட்டை விரைவுபடுத்தவும், சர்வரின் செயல்பாட்டில் தொய்வு ஏற்படாத வகையிலும் கூடுதல் சர்வர்கள் இணைக்கப்பட்டுள்ளது என்றார்.