மத்திய அரசு டாக்டர்கள் ஓய்வு வயது 65 ஆக உயர்வு: இன்று முதல் அமல்

புது தில்லி: மத்திய அரசு துறைகளில் பணியாற்றும் மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்துவதற்கு ஒப்புதல் அளித்து பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், சஹாரன்பூர் நகரில் மத்திய அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மத்திய, மாநில அரசு மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயது 65-ஆக உயர்த்தப்படும் என்றார்.
நம் நாட்டைப் பொருத்தவரை, மருத்துவர்களின் தேவை அதிகரித்து வருகிறது. அதேசமயத்தில், இரண்டே ஆண்டுகளில் இந்தத் தேவையைப் பூர்த்தி செய்வது மிகவும் கடினமாகும்.
இதனைக் கருத்தில்கொண்டே, அரசு மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. அரசு மருத்துவர்கள் ஓய்வு பெறும் வயதானது, மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. எனவே, நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை 65-ஆக உயர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது என கூறியிருந்தார்.
இதன்படி மத்திய சுகாதாரத் துறையில் பணியாற்றும் மருத்துவர்களின் ஓய்வு வயதை 65 ஆக உயர்த்துவதற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று ஒப்புதல் அளித்தார். மோடி ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, இன்று முதல் அத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது.
இதன் மூலம் நாட்டில் நிறைவேற்றப்படும் சுகாதாரத் திட்டங்ளை மேம்படுத்த முடியும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா கூறினார்.