இன்ஜி., கவுன்சிலிங்... தாமதம்? பிளஸ் 2 மாணவர்களுக்கு சிக்கல்

மருத்துவ நுழைவுத் தேர்வு அறிவிப்பால், பி.இ., - பி.டெக்., படிப்புக்கான இன்ஜி., கவுன்சிலிங் நடத்துவதில், புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. மருத்துவ கவுன்சிலிங்கை நடத்தாமல், இன்ஜி., கவுன்சிலிங்கை நடத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

'மருத்துவ கல்லுாரி மாணவர் சேர்க்கைக்கு கட்டாயம் நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும்; தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், இரண்டாம் கட்டமாக, ஜூலை, 24ல் தேர்வை நடத்த வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த தேர்வு குறித்து, தமிழக அரசு இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. மருத்துவக் கவுன்சிலிங் தேதியையும் அறிவிக்கவில்லை. இந்த நிலையில், மருத்துவக் கவுன்சிலிங்கை நடத்தாமல், இன்ஜி., கவுன்சிலிங்கை நடத்த முடியுமா என, புதிய சிக்கல் எழுந்துள்ளது.
வழக்கமாக, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் இறுதி வாரத்தில், மருத்துவக் கவுன்சிலிங் நடத்தப்படும். மருத்துவ படிப்புக்கு இடம் கிடைக்காத மாணவர்கள் இன்ஜி., கவுன்சிலிங்கில் முன்னணி இடங்களை பெறுவர். எனவே, மருத்துவக் கவுன்சிலிங் முடிந்த பின், இன்ஜி., கவுன்சிலிங்
நடத்தப்படும்.

ஆனால், இந்த ஆண்டு ஜூலை, 24ல் தான் மருத்துவ நுழைவுத் தேர்வு நடக்க உள்ளது. அதன் பின், தேர்வு முடிவுகள் வந்து, தரவரிசை பட்டியல் வெளியிடப் பட்டால், ஆகஸ்டில் தான் மருத்துவக் கவுன்சிலிங்கை நடத்த முடியும் என்ற சூழல் உள்ளது.இதன்பிறகே, இன்ஜி., கவுன்சிலிங்கை நடத்த வேண்டும்.

ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, ஜூலை, 30க்குள், அனைத்து இன்ஜி., கல்லுாரிகளிலும் மாணவர் சேர்க்கையை முடித்து, ஆகஸ்டில் வகுப்புகளை துவங்க வேண்டும். இந்த உத்தரவுப்படி பார்த்தால், இந்த ஆண்டு மருத்துவக் கவுன்சிலிங்குக்கு முன், இன்ஜி., கவுன்சிலிங்கை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

காத்திருப்பு: ஆனால், இன்ஜி., கவுன்சிலிங்கை நடத்திய பின், மருத்துவக் கவுன்சிலிங் நடத்தி னால், இன்ஜி.,யில் முதலில் சேரும் மாணவர்கள், தங்களுக்கு மருத்துவ இடம் கிடைத்ததும், இன்ஜி., படிப்பிலிருந்து, மாற்று சான்றிதழ் வாங்கி விட்டு, மருத்துவக் கல்லுாரிகளில் சேரும் சூழல் ஏற்படும். அவ்வாறு சேரும் போது, இன்ஜி.,யில் முக்கிய பாடப்பிரிவுகளில், 2,000 இடங்கள் காலியாகும். அந்த இடங்களில்காத்திருப்பில் உள்ளவர்களை நிரப்ப முடியாது.

ஏனென்றால், மருத்துவ படிப்பு செல்லும் இன்ஜி., மாணவர்கள் அதிக மதிப்பெண் படி, கவுன்சிலிங் கில் முக்கிய பாடப்பிரிவுகளை பெற்றிருப்பர். அந்த முக்கிய பாடப்பிரிவுகள் காலியாகும் போது, குறைந்த மதிப்பெண் பெற்று, காத்திருப்பில் உள்ளவர்களுக்கு வழங்கினால், அது பாரபட்சமான தாக இருக்கும். அதேநேரம், காலியாகும்

மிக முக்கியமான முன்னணி பாடப்பிரிவு களில் மாணவர்களை சேர்க்காமலும் விடவும் முடியாது.

ஆலோசனை:
இந்த குழப்பங்களால், இன்ஜி., கவுன்சிலிங்கை எப்படி நடத்துவது என, அண்ணா பல்கலையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக இன்ஜி., மாணவர் சேர்க்கை குழு விலுள்ள உயர்கல்வி செயலர் அபூர்வா, அண்ணா பல்கலை துணைவேந்தர் ராஜாராம், தொழில் நுட்ப கல்வி இயக்குனர் மதுமதி, மாணவர் சேர்க்கை செயலர் இந்துமதி உள்ளிட்ட அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்த பிரச்னை குறித்து, அண்ணா பல்கலை துணைவேந்தர் ராஜாராமிடம் கேட்டபோது, ''அடுத்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், கவுன்சிலிங் குறித்து தெளிவான முடிவு எடுக்கப்படும்,'' என்றார். அடுத்த வாரம் இந்த கூட்டம் நடக்கும் என தெரிகிறது.