100 யூனிட் இலவச மின்சாரம்.. யாருக்கு லாபம்?



முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள 100 யூனிட் இலவச மின்சாரம் அனைத்து வீட்டு உபயோக மின் இணைப்பு பெற்றவர்களுக்கும்
பொருந்தும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிமுக தேர்தல் அறிக்கையில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் "தற்போதைய கணக்கீட்டு முறைப் படி 100 யூனிட் மின்சாரம் கட்டணம் ஏதுமின்றி வீடுகளுக்கு வழங்கப்படும்" என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து நடந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை பிடித்தது. தமிழக முதல்வராக 6-வது முறை யாக ஜெயலலிதா நேற்று பதவி யேற்றார். தொடர்ந்து அவர், தலைமைச் செயலகத்தில் முதல்வர் பொறுப்பையும் ஏற்றார். இதைத் தொடர்ந்து, 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் ஒன்று, 100 யூனிட் இலவச மின்சாரம்.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், '100 யூனிட் இலவச மின்சாரம் வீடுகளுக்கு வழங்கப்படும் என்ற கோப்பில் முதல்வர் கையெழுத்திட்டார். மின்வாரியத்துக்கு ஆயிரத்து 607 கோடி மானியமாக அரசு வழங்கும். இந்த சலுகை மே 23-ம் தேதி (நேற்று) முதல் அமல்படுத்தப்படும்' என கூறப்பட்டிருந்தது.
தேர்தல் அறிக்கையில், 100 யூனிட் வரை பயன்படுத்தும் 78 லட்சம் மின் உபயோகிப்பாளர்கள் மின் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை என கூறப்பட் டிருந்ததால், இது அனைத்து வீட்டு மின் இணைப்பு நுகர்வோருக்கும் பொருந்துமா என்ற கேள்வி எழுந்தது.
இது தொடர்பாக, எரிசக்தித் துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, "இது அனைத்து வீட்டு இணைப்பு மின் நுகர்வோருக்கும் பொருந்தும். 100 யூனிட்களுக்கு அதிகமாக பயன்படுத்துவோர், கூடுதலாக பயன்படுத்தும் ஒவ்வொரு யூனிட்டுக்கும் பழைய கணக்கீடுப்படி, கட்டணத்தை செலுத்த வேண்டும். அதாவது, 100 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தும் அடுத்த 100 யூனிட்களுக்கு தலா ரூ.1 வீதம் செலுத்த வேண்டும். இலவச 100 யூனிட்கள் தவிர கூடுதலாக 200 யூனிட் பயன்படுத்தினால் ஒரு யூனிட்டுக்கு ரூ.1.50 வசூலிக்கப்படும்.
இதேபோல், நாம் பயன்படுத் தும் முதல் 100 யூனிட்டை கழித்துவிட்டு, மீதமுள்ள யூனிட் களுக்கு பழைய கட்டணத் தொகையே வசூலிக்கப்படும். இது தொடர்பான தெளிவான கட்டண முறை விரைவில் வெளியாகும்" என்றார்.
மின்வாரிய தொழிற்சங்கத்தினர் இது தொடர்பாக கூறும்போது, "100 யூனிட்களுக்குள் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இந்த கட்டண முறை அதிக பயன் தரும். மின் வாரியத்தில் கணக்கீட்டாளர் பற்றாக்குறை உள்ளது. 100 யூனிட் அளவை கணக்கிட பணியாளர் செல்வதற்கான செலவு அதிகம் என்பதை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கருதுகிறோம். ஆனாலும் கண் காணிப்பு இருக்க வேண்டும்" என்றனர்.