JEE தேர்வில் புதிய முறை அறிமுகம்:பள்ளிக்கல்விக்கு மீண்டும் முக்கியத்துவம்

அடுத்த கல்வியாண்டு முதல், பிளஸ் 2வில், 75 சதவீத மதிப்பெண் பெறுவோர் மட்டுமே, ஐ.ஐ.டி.,க்களில் சேர்வதற்கான, ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வான ஜே.இ.இ., தேர்வை எழுத முடியும்.தேசிய கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி., - ஐ.ஐ.ஐ.டி., மற்றும் என்.ஐ.டி., போன்றவற்றில், பி.இ., - பி.டெக்., படிப்புகளில் சேர ஜே.இ.இ., நுழைவுத்தேர்வு எழுத வேண்டும்
நுழைவுத்தேர்வில், 25 ஆயிரத்துக்குள், 'ரேங்க்' எடுக்க வேண்டும்
நுழைவுத்தேர்வு மதிப்பெண்ணுடன், பிளஸ் 2 மதிப்பெண்ணை, 40 சதவீதத்திற்கு கணக்கிட்டு, 'வெயிட்டேஜ்' மதிப்பெண்ணாக மாற்றி சேர்ப்பார்கள். இதன் பிறகே, கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியும்.

இந்த தேர்வுக்காக, நாடு முழுவதும் மாணவர்கள் பயிற்சி மையங்களில் சேர்ந்து படிக்கின்றனர். அதனால், ஒவ்வொரு ஆண்டும் பயிற்சி மையத்திற்கு, குறைந்தது ஒரு லட்சம் ரூபாய் கட்டணமாக செலுத்துகின்றனர். இந்த அடிப்படையில், நாடு முழுவதும், 24 ஆயிரம் கோடி ரூபாய் பயிற்சி மையங்களுக்கு கட்டணமாக வசூலாகிறது.அத்துடன், மாணவர்கள், பிளஸ் 2 படிப்பில் அதிக கவனம் செலுத்தாமல், பயிற்சிக்கே முக்கியத்துவம் கொடுத்து வந்தனர். எனவே, ஐ.ஐ.டி., மாணவர்களில் பலர், ஆராய்ச்சிகளில் ஈடுபடாமல் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
எனவே, ஜே.இ.இ., நுழைவுத்தேர்வு முறையை மாற்ற, ரூர்கி ஐ.ஐ.டி., பேராசிரியர் அசோக் மிஸ்ரா தலைமையிலான ஆய்வு கமிட்டியை மத்திய அரசு அமைத்தது. இந்த கமிட்டியினர், 2015 நவம்பர், 5ல் மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தது.

இந்த அறிக்கையின் கீழ், பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்ட பின் புதிய முடிவை, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.மத்திய அரசு அறிவித்துள்ள புதிய முறை:

இனி, பிளஸ் 2 பொதுத்தேர்வில் குறைந்த பட்சம், 75 சதவீத மதிப்பெண் அல்லது அதிகபட்ச முதல் மதிப்பெண்ணில் இருந்து, 20 சதவீதத்திற்குள் மதிப்பெண் பெற்றால் மட்டுமே ஜே.இ.இ., நுழைவுத்தேர்வை எழுத முடியும். ஜே.இ.இ., நுழைவுத்தேர்வில், 25 ஆயிரத்துக்குள், 'ரேங்க்' பெற வேண்டும் பிளஸ் 2 மதிப்பெண்ணில், 40 சதவீதம், 'வெயிட்டேஜ்' மதிப்பெண்ணாக சேர்க்கப்படாது; இந்த முறை கைவிடப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஜே.இ.இ., நுழைவுத்தேர்வில், தமிழகம் உட்பட பின் தங்கிய மாநில மாணவர்கள் பங்கேற்று, அதிக அளவில் ஐ.ஐ.டி.,யில் சேர வாய்ப்பு கிடைக்கும். மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ.,யில் படித்தாலும், பிளஸ் 2வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும்.தமிழக மாணவர்கள், பிளஸ் 2 பொதுத்தேர்வில் மொத்தம், 1,200 மதிப்பெண்ணில், குறைந்த பட்சம், 900 மதிப்பெண் பெற்றால், ஜே.இ.இ., நுழைவுத்தேர்வை எழுத முடியும்.