கைரேகை அழிந்தோருக்கு பென்ஷன் இல்லை

சிவகங்கை;கைரேகை அழிந்த ஓய்வூதியர்களுக்கு பென்ஷன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.ஓய்வூதியர்களுக்கு மாவட்ட கருவூலம், சார் கருவூலங்களில் ஏப்ரல் முதல் ஜூன் வரை நேர்காணல் நடக்கிறது. பங்கேற்க செல்வோர் ஓய்வூதிய புத்தகம், வங்கி சேமிப்பு கணக்கு எண் எடுத்துச் செல்ல வேண்டும். மேலும் இதுவரை ஆதார் எண், வருமான வரி கணக்கு எண், ரேஷன்கார்டு சமர்ப்பிக்காதோர், அவற்றின் நகல்களை ஓய்வூதிய கொடுவை ஆணை எண்ணை குறிப்பிட்டு சமர்ப்பிக்க வேண்டும்.

அதேபோல் நேரில் வர இயலாதோர், ஓய்வூதிய புத்தகம், வங்கி சேமிப்பு கணக்கு எண், ஆதார் எண், வருமான வரி கணக்கு எண், ரேஷன்கார்டு ஆகியவற்றின் நகல்களுடன் வாழ்வுரிமைச் சான்றை இணைத்து கருவூலத்திற்கு அனுப்ப வேண்டும் என, கருவூல கணக்குத்துறை தெரிவித்துள்ளது.இதில் 70 வயதை கடந்த ஓய்வூதியர்கள் சிலரது கைகளில் ரேகை அழிந்துவிட்டன. மேலும் ஆதார் எண் எடுப்போர் பல ஆண்டுகளாக ஒரே இயந்திரத்தை பயன்படுத்துவதால், தெளிவான கைரேகை இருந்தால் மட்டுமே பதிவாகிறது. இதனால் ஓய்வூதியர்களில் சிலர் ஆதார் அட்டை எடுக்க முடியாமல் தவிக்கின்றனர்.

தற்போது ஆதார் அட்டை இல்லாதோரை நேர்காணல் நடத்தாமல் கருவூல கணக்குத்துறைஅதிகாரிகள் திருப்பி அனுப்புகின்றனர். இதனால் ஓய்வூதியர்கள் பென்சன் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.ஆதார் எண் கொடுக்காத சிலருக்கு மார்ச் மாத பென்ஷனே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் தவிக்கின்றனர். கருவூல கணக்குத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''ஆதார் அட்டை எண் கண்டிப்பாக கொடுக்க வேண்டும்,'' என்றார்.