பணி வரன்முறை இன்றி ஊழியர் இறப்புகருணைப் பணி கோர முடியாது:உயர்நீதிமன்றம் உத்தரவு.

பணி வரன்முறை செய்யப்படாத ஊழியர்இறந்தால், அவரது சட்டப்பூர்வ வாரிசுகள் கருணைப் பணி கோர முடியாது,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
 
         சிவகங்கை சண்முகம். திருப்புத்துார் நீதித்துறை நடுவர் (மாஜிஸ்திரேட்) நீதிமன்றத்தில் காவலாளியாக பணிபுரிந்தார்.அவரது பணி வரன்முறைப்படுத்தப்படவில்லை.வேலை நேரத்தில் அடிக்கடி வெளியில் சென்றுவிடுவார்.


         சண்முகம் 2007 பிப்.,17 முதல் 18 வரை வேலைக்கு வரவில்லை. இதை, திருப்புத்துார் நடுவர், சிவகங்கை முதன்மை நீதித்துறை நடுவருக்கு தெரிவித்தார். சண்முகத்திற்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.சண்முகம் குற்றச்சாட்டுகளை மறுத்து விளக்கம் அளித்தார். அவரை பணி நீக்கம் செய்து, 2007 பிப்.,28 ல் சிவகங்கை முதன்மை நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார். இதை ரத்து செய்யக்கோரி, உயர்நீதிமன்றக் கிளையில் சண்முகம் மனு செய்தார்.

வழக்கு நிலுவையில் இருந்தபோது, சண்முகம் இறந்தார்.அவரது குடும்பத்தைச் சேர்ந்த சட்டப்பூர்வவாரிசுகள் சவுந்தரவள்ளி, முத்துலட்சுமி மனுதாரர்களாக இணைத்துக் கொண்டு, வழக்கை நடத்தினர்.நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சி.டி.செல்வம் கொண்ட அமர்வு உத்தரவு: சிவகங்கை முதன்மை நடுவரின் உத்தரவு ஏற்புடையதே. சண்முகத்தின் பணி வரன்முறை செய்யப்படவில்லை.இச்சூழ்நிலையில் அவர் இறந்ததால், அவரது சட்டப்பூர்வ வாரிசுகள் கருணைப் பணி கோர முடியாது. மனுவை தள்ளுபடி செய்கிறோம், என்றனர்.