5 நகரங்களில் 104 டிகிரி வெயில் பதிவு

  தமிழகத்தில் திருச்சி, சேலம் உள்பட 5 நகரங்களில் சனிக்கிழமை அதிகபட்சமாக 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

                  நிகழாண்டு மார்ச் மாதம் முதலே சென்னை, மதுரை, பாளையங்கோட்டை, கரூர் பரமத்தி, கோவை, சேலம், தருமபுரி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வந்தது.
 பல நகரங்களில் 100 டிகிரி
               ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெயில் பதிவானது. இந்த நிலையில், மார்ச் மாதத்தின் இறுதி நாள்களில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து ஓரிரு மாவட்டங்களில் மழை பெய்தது.
                     அதைத் தொடர்ந்து, தற்போது மீண்டும் வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. தமிழகம், ஓடிசா, ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வெப்பத்துடன் கூடிய அனல் காற்று வீசி வருகிறது. தமிழகம், புதுச்சேரி உள்பட ஓரிரு மாநிலங்களுக்கு வெப்ப அலையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதன்படி, 107 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் நிலவியது.
                வெப்ப அலை எச்சரிக்கை இல்லை...: சனிக்கிழமை மாலை நிலவரப்படி, கரூர் பரமத்தி, திருச்சி, சேலம், தருமபுரி உள்பட 5 மாவட்டங்களில் அதிகபட்சமாக 104 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் நிலவியது. அதற்கு அடுத்தபடியாக வேலூர், மதுரை, பாளையங்கோட்டை ஆகிய நகரங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் மேல் வெப்பம் நிலவியது.
                அடுத்து வரும் நாள்களுக்கு பெரும்பாலான நகரங்களில் வறண்ட வானிலை நிலவும். சென்னையில் வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். தமிழகம், புதுச்சேரிக்கு வெப்ப அலை எச்சரிக்கை ஏதுமில்லை. அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
               சனிக்கிழமை பதிவான வெயில் நிலவரம் (டிகிரி ஃபாரன்ஹீட்டில்):
 கரூர் பரமத்தி, தருமபுரி,
 திருப்பத்தூர், திருச்சி, சேலம் 104
 வேலூர், மதுரை 103
 பாளையங்கோட்டை 102
 சென்னை மீனம்பாக்கம்,
 கோவை 99