மதிய உணவுக்கு பதில் ரூ.150 :தேர்தல் கமிஷன் உத்தரவு

தேர்தல் பணி தொடர்பான பயிற்சிக்கு வரும் ஊழியர்களுக்கு, மதிய உணவுக்கு பதிலாக, உணவுப்படி வழங்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், மே, 16ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இப்பணியில், 1.97 லட்சம் பெண்கள் உட்பட, 3.29 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கான பயிற்சி முகாம், நேற்று தமிழகம் முழுவதும் துவங்கியது.

இவர்களுக்கு, மூன்று கட்டமாக பயிற்சி வழங்கப்பட உள்ளது. பயிற்சிக்கு வரும் ஊழியர்களுக்கு, மதிய உணவு வழங்க, ஒருவருக்கு, 150 ரூபாய் ஒதுக்கப்படுகிறது. ஆனால், பயிற்சி முகாமிற்கு ஏற்பாடு செய்யும் அதிகாரிகள், அந்தத் தொகையை, முறையாக செலவழிப்பதில்லை; தரமான உணவு வழங்குவதில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இப்பிரச்னைக்கு தீர்வு காண, பயிற்சிக்கு வரும் ஊழியர்களுக்கு, அவர்கள் கையில், 150 ரூபாயை வழங்கி விடுங்கள். பயிற்சி முகாம் நடைபெறும் இடத்தில், ஏதேனும் ஓட்டல் நிறுவனத்தை ஸ்டால் அமைக்க சொல்லுங்கள். பயிற்சிக்கு வருவோர் விரும்பிய உணவை வாங்கி சாப்பிடட்டும் என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.