மாற்றுத் திறனாளிகளுக்கு வாக்களிக்க முன்னுரிமை: தேர்தல் ஆணையம் உத்தரவு

மாற்றுத்திறனாளிகளை வரிசையில் நிற்க வைக்காமல், வாக்களிக்க முன்னுரிமை வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

             சட்டப் பேரவைத் தேர்தலில் வாக்களிக்கச் செல்லும் மாற்றுத் திறனாளிகளுக்கு என்னென்ன வசதிகளைச் செய்து தர வேண்டும் என்பது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் பின்வருமாறு:-
• கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி வாக்குச் சாவடி மையத்துக்குள் செல்ல சக்கர நாற்காலியை அளிக்க வேண்டும். நிரந்தர சாய்தள வசதி இல்லாவிட்டால், தாற்காலிகமாகமாக ஏற்படுத்த வேண்டும்.
• தேர்தல் விதிகள் 1961-ன் கீழ், பார்வையற்றவர் வாக்குச் சாவடிக்குள் செல்ல துணையாக ஒருவரை அழைத்துச் செல்லலாம். அவர் தனது வாக்கை பதிவு செய்ய துணையாகச் செல்வோர் உதவி செய்யலாம்.
• பார்வையற்றவரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்புகளின்போதே அறிவுறுத்த வேண்டும்.
• மாற்றுத் திறனாளிகளுக்கு என்னென்ன தேவைகள் இருக்கும் என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும். வாக்குச் சாவடிகளில் தேவையான அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்திட அறிவுறுத்திட வேண்டும்.
• செவித் திறனும், பேசும் திறனும் அற்றோர் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
• மாற்றுத் திறனாளிகளை வாக்குச் சாவடிகளுக்குள் வரிசையில் நிற்க வைக்காமல் உடனடியாக வாக்களிக்க முன்னுரிமை அளிக்க வேண்டும்.